மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடியில் வைத்து சுமார் 11 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளை இன்று காலை இராணுவத்தினர் கைப்பற்றினர். போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஐஸ் ரக போதைப்பொருள்மீட்கப்பட்டுள்ளது. கூலர் ரக வாகனத்தின் முன் இருக்கையில் சூட்சுமமான முறையில் பதுக்கி வைத்து கொண்டு செல்லப்பட்ட 10 பொதிகளை கொண்ட 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பெரிய கடை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.