இப்படியும் நடக்கிறது…!

0
189

இந்த நாடு இன்று இப்படியொரு பொருளாதார நெருக்கடியில் இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அடிப்படையில் ஒரு பிரச்னைதான்.
ஊழல்.
இன்று நாட்டின் டொலர் கையிருப்பு குறைந்ததற்கு என்ன காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
அத்தியாவசிய பொருட்களை, எரிபொருளில் இருந்து எரிவாயு, சீனி, கிழங்கு, சமையல் எண்ணெய் என்று அனைத்துமே வெளிநாட்டிலிருந்துதான் வரவேண்டும் என்றால் அவற்றை கொண்டுவருவதற்கு டொலர்கள் தேவை.
அது எந்தெந்த வழிகளில் நமக்கு வருகின்றதோ அவை தடைப்படும்போது சிக்கல் ஏற்படுவது சகஜமானதுதான்.
ஆனால், சுற்றிவர கடலால் சூழப்பட்ட நமது நாட்டில் காற்றும், அதேவேளை வெயிலும் தாராளமாகக் கிடைக்கின்றது.
இவை இரண்டையும் கொண்டு மின்சாரத்தை தயாரிக்கத் தொடங்கியிருந்தால் எமது மின் தேவைக்கு பெரும்பகுதியை அவை ஈடுசெய்திருக்கும்.
ஆனால் நாமோ, டீசலை பயன்படுத்தி ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரத்தை உற்பத்திசெய்து பாவித்துக் கொண்டிருக்கின்றோம் என்பது எவ்வளவு கொடுமையான செய்தி.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் டீசல் தேவை, அந்த டீசலை கொண்டுவருவதற்கும் டொலர் தேவை.
இந்த டீசலுக்காக அதாவது, மின் உற்பத்தியை செய்யும் டீசலுக்காக செலவிடும் டொலரைக் கொண்டு, இலங்கையிலுள்ள ஒவ்வொருவரின் வீட்டுக் கூரைகளிலும் சூரியசக்தியில் மின் உற்பத்தியை செய்து அதனையே உங்கள்தேவைக்கு பயன்படுத்துங்கள் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாகவே சூரிய சக்தி மின்உற்பத்தி சாதனங்களைக் கொடுத்திருந்தால், இன்று நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் ஒன்று இருந்திருக்காது.
ஏன் இவ்வாறு செய்யவில்லை என்று யாராவதுகேட்டால் பதில் மிகச் சுலபமனது. ஊழல்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் அவர்களின் மின்தேவையை அவர்களே ஈடுசெய்வதுபோல சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனங்களை கொடுத்திருந்தால், வாங்குகின்ற ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் கிடைக்கும் தரகுத்தொகை கிடைக்காமல் போய்விடும் என்பது சம்பந்தப்பட்டவர்களின் கவலை. அதனால்தான் இதுபோன்ற திட்டங்களைப் பற்றி யாரும் கண்டுகொள்வில்லை.
நாடு இத்தனை நெருக்கடிக்குள் இருக்கும்போதும் இப்படியொரு செய்தியை படிக்க முடிகின்றது என்றால், நமது நாடு எந்த நிலையில் இருக்கின்றது என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம்.
நேற்றைய ‘ஈழநாடு’வில் வெளிவந்த செய்தி இது.
‘தரமற்ற மசகு எண்ணெய் இறக்குமதி காரணமாக எரிபொருள் உற்பத்தியானது 22 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோரல் எனர்ஜீ எனப்படும் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயின் தரம் தொடர்பில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.
இதனால் சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெற்றோல் மற்றும் டீசல் உற்பத்தியானது வீழ்ச்சியடைந்துள்ளது.
டுபாயில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனத்திடமிருந்து மசகு எண்ணெய் அல்லது எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டாம் என பெற்றோலிய கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் விடுத்துவரும் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.’
இதுவே அந்த செய்தி. ஏற்கனவே எரிபொருள் கொள்வனவின்போது குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றிற்கு ‘கொமிஷன்’ வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இப்போது தரமற்ற மசகு எண்ணெயை இறக்குமதி செய்திருப்பதாக செய்திகள் வெளியாவது ஒரு விடயத்தை மாத்திரம் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது.
இந்த நாடு என்னதான் நடந்தாலும் அது திருந்துவதற்கு சந்தர்ப்பம் இல்லை என்பதே அந்த விடயம்.
அந்த விடயம் ஒரு சஞ்சிகையில் படித்த துணுக்கு ஒன்றைத்தான் எமக்கு ஞாபகப்படுத்துகின்றது.
ஒரு கடையில் எழுதி வைக்கப்பட்டிருந்த விளம்பரம் இது: ‘நாங்கள் விற்ற எந்தப் பொருளும் சரியில்லை என்றால் எங்களிடம் திருப்பித் தந்து விடலாம்.
அதற்குப் பதிலாக அதேதரமுள்ள பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.’ இதுதான் அந்த கடையில் எழுதி வைக்கப்பட்டிருந்த விளம்பரம்.
எங்கள் நாட்டில், ஒருவர் ஊழல் செய்கிறார் என்று நாங்கள் அவரை பதவியிலிருந்து வெளியேற்றினாலும் அதே தரமுடைய ஒருவரைத்தான் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிப்போம் என்கிறார்களோ?

ஊர்க்குருவி