ஜப்பானின் தலையீடு?

0
221

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் ஒரு நீண்ட உறவுண்டு. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னணியில் கொழும்புக்கும் சீனாவுக்குமான (பீஜிங்) உறவு வலுவடைந்தது.
அதுவரையில் ஜப்பானே இலங்கைக்கு கடனுதவி வழங்குவதில் முதன்மையான இடத்தைப் பெற்றி ருந்தது. ஜே. ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக வந்தமையைத் தொடர்ந்து 1978இலிருந்து ஜப்பானே வெளிநாட்டு கடன்களை வழங்குவதில் முதன்மையான பங்காளி நாடாக செயல்பட்டு வந்தது.
ஜப்பான் மேற்குலகின் – பிரதானமாக அமெரிக்காவின் முதன்மையான ஆசிய பங்காளியாகும் – அதேவேளை முதன்மையான சீன எதிர்ப்பு நாடாகும்.
சீன எதிர்ப்பின் அடிப்படையில்தான் ஜப்பான் மேற்குலகின் நட்பு நாடாக இருக்கின்றது. சீனாவுக்கும் ஜப்பானுக்குமான முரண்பாடுகள் வரலாற்று ரீதியானவை.
சீனாவின் அண்மைய எழுச்சி முக்கியமாக, தென்சீனக் கடலில் சீன கடற்படையின் விரிவாக்கம் தொடர்பில் ஜப்பான் கலக்கமடைந்திருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில்தான் இந்தோ – பசுபிக் மூலோபாயம் ஒன்றை ஜப்பான் முன்மொழிந்தது.
அண்மையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி, உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயே (Shinzo Abe) இந்தோ – பசுபிக் மூலோபாயம் தொடர்பில் முதலில் பேசியவராவார்.
இந்தோ – பசுபிக் என்னும் அடிப்படையில் மேற்குலகமும் ஆசியாவும் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும் என்னும் முன்மொழிவை 2007இல் அவரின் இந்திய விஜயத்தின்போதே முதன்முதலாக வலியுறுத்தியிருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் இந்தோ – பசுபிக் மூலோபாயத்தை அமெரிக்கா கையிலெடுத்தது. அதுவரையில், ஆசிய – பசுபிக் என்னும் நிலையிலிருந்த அமெரிக்க அணுகுமுறை மாற்றமடைந்தது. ஆசிய விவகாரங்களை கவனிக்கும் அமெரிக்காவின் பிரதான இராணுவ தளமான ஆசிய – பசுபிக் கட்டளை பீடம், ‘இந்தோ – பசுபிக் கட்டளைப்பீடம்’ என்று பெயர் மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே ‘குவாட்’ என்னும் அமெரிக்க – ஆசிய இராணுவ ஊடாட்டத்துக்கான நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
குவாட் விவகாரத்தை சீனா இராணுவ நோக்கிலேயே விமர்சித்து வருகின்றது.
நேட்டோ போன்ற ஒன்றுதான் இதுவென்று சீனா தொடர்ந்தும் விமர்சித்து வருகின்றது.
இவ்வாறான பின்னணியைக் கொண்டிருக்கும் ஜப்பானின் உதவியை இலங்கை மீண்டும் கோரியிருக்கின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் நோக்கில் நாடுகளின் உதவி
யைப் பெறுவதற்கான கொடையாளர் மகாநாடு ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பானின் உதவியை ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார்.
இதில், இணைப்பாளராக செயல்படுவதற்கு தாம் தயாராக இருக்கிறார் என்று ஜப்பானின் நிதியமைச்சர் சூனிச்சி சுசூகி (Shunichi Suzuki) தற்போது அறிவித்திருக்கின்றார்.
ஜப்பான் சமாதான முன்னெடுப்புக்களின்போதும் பிரதான பங்கை வகித்திருந்தது.
ஜப்பானின் பங்களிப்புக்கள் எப்போதும் அமைதியாக இருப்பதே வழக்கம்.
அப்போது விடயங்களை கையாள்வதற்காக யசூசி அகாசி என்பவரை சிறப்பு தூதுவராக ஜப்பான் நியமித்திருந்தது.
விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமான பேச்சை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு ஜப்பான் பல்வேறு பங்களிப்புக்களை வழங்கியிருந்தது.
மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கலாம் என்னும் நிலைமை ஏற்பட்டபோதும் யசூசி அகாசி வன்னிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வனை சந்தித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
இன்றைய சூழலை தமிழர் தரப்புக்கள் எவ்வாறு நோக்கலாம் – நோக்க வேண்டும்? கொடை வழங்கும் நாடுகளின் மகாநாடு தொடர்பில் பேசப்படும் நிலையில் வடக்கு – கிழக்கின் பாதிப்புக்கள் தொடர்பிலும் அவை தனியாக நோக்கப்பட வேண்டும் என்னும் அடிப்படையிலும் ஒரு விசேட அறிக்கையொன்றை தயார் செய்து குறித்த குவாட் நாடுகளுக்கும் இதேபோன்று மேற்குலக நாடுகளுக்கும் வழங்க வேண்டும்.
இது தொடர்பில் தமிழ் கட்சிகள் துரிதமாக பணியாற்ற வேண்டும்.
தமிழர்கள் ஒரு தனியான தரப்பு என்பதை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டி ருக்க வேண்டும்.