பூஜ்ஜியம் என்ற நிலைமைக்கு வீழ்ச்சியை எதிர்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவால் ஏதோ ஒரு வழியில் நாட்டின் ஜனாதிபதியாக வர முடியுமெனில் ஏனையவர்களால் ஏன் முன்னோக்கி பயணிக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியால் முன்னோக்கி பயணிக்க முடியும். முடியாது என்று பின்வாங்கி செயற்பட வேண்டாம் என்றே கட்சியின்; உறுப்பினர்களுக்கு கூற விரும்புகின்றேன்.
சில ஊடகங்கள் எமக்கு ஆதரவு வழங்கி செயற்படுகின்றன. சில ஊடகங்கள் எமது கட்சி சார்பில் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றன.
ஒவ்வொரு ஊடகங்களின் நிலைப்பாடு அதுவாகக் காணப்படுகின்றது.
நான் ஜனாதிபதியாக இருக்கும்போது இனி இல்லை என்றளவில் சேறு பூசினார்கள்.
அவ்வாறு சேறு பூசினாலும்கூட பொலன்னறுவையில் நான் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றிபெற்றேன்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது ஒவ்வொருவரது குடும்ப வாழ்விலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக குறுகிய காலத்தில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு கோரினோம்.
உண்மையில் சர்வகட்சி அரசாங்கம் என்பது என்ன? சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைந்தால் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற இரு கட்சிகள் இருக்காது. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி செயற்பட வேண்டும். ஒன்றாக அமர்ந்து நாட்டின் நலன் குறித்த தீர்மானத்தில் ஈடுபட வேண்டும்.
கட்சிக்குள் சிறந்த கொள்கைகள், ஒழுக்கம் இல்லாததன் காரணமாகவே கட்சியானது பிளவுபட்டு போவதாக பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்சியின் தலைமைத்துவம் சிறந்த முறையில் அமையாததன் காரணமாகவும் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு இருப்பதாக என்னை விமர்சிக்கவும் செய்கின்றனர்.