இப்படியும் நடக்கிறது…!

0
166

இப்போதெல்லாம் யாராவது அரசியல் தலைவர்கள் ஏதாவது கருத்துச் சொன்னால் சிலர் உடனே இந்த ஊர்க்குருவிக்கு தொலைபேசி எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
தமது கருத்தை இந்த ஊர்க்குருவி ஊடாக சொல்வது அவர்களின் நோக்கமாக இருக்கவேண்டும்.
நேற்று இந்தப் பத்தியில் கூட்டமைப்பிலிருந்து பங்காளிக் கட்சிகளை வெளியேற்றவேண்டும் என்ற கருத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருந்த கருத்துப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
பங்காளிக் கட்சிகளை வெளியேற்றாவிட்டாலும் அவர்களைத் தேர்தலில் தோற்கடிப்பது எப்படி என்ற வித்தையையும் அவர் சொல்லியிருந்தார்.
அந்தப் பத்தியைப் படித்துவிட்டு ஒருவர் கனடாவிலிருந்து தொடர்பு கொண்டு கேட்டார், ‘அதுதான் அவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுமந்திரனுக்கு ஆதரவு வழங்கினார் போலும்’ என்று கேட்டார்.
அவரின் கேள்வி, சுமந்திரனை தோற்கடிப்பதற்காகத்தான் அவர் ஆதரவு வழங்கினாரா? என்று கேட்பது போல இருந்தது.
‘இல்லையே அவர், தான் தோற்றாலும் பரவாயில்லை.
சுமந்திரன் வெல்ல வேண்டும் என்றல்லவா கூறியிருந்தார்’ என்றேன்.
‘அவர் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் பங்காளிக் கட்சி கள் மட்டுமன்றி, தமிழ் அரசுக் கட்சியிலும் சிலர் தன்னிச்சையாக இராஜதந்திரிகளை சந்திப்பதும், அறிக்கைகள் விடுவதையும்தானே கண்டித்திருந்தார். ஆனால், அவரும் சில வேளைகளில் அதனைத்தானே செய்கின்றார்’ என்று கேட்டார் அவர்.
அப்படி அவர் என்னதான் செய்கின்றார். சிலவேளைகளில் தனது மனதில்பட்டதை வெளிப்படையாக சொல்கிறாரே தவிர, அவர் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லையே?’ என்றேன்.
‘கடைசியாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது, ஈழத் தமிழர்களுக்காக சுதந்திரமான பொதுசன வாக்கெடுப்புக்கு வழிகோலுமாறு ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகளை கோரியிருந்ததாக உங்கள் பத்திரிகையில்தானே படித்தேன்.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை இல்லையே’, என்றார்.
அவ்வாறான கோரிக்கை என்பது தமிழீழக் கோரிக்கைக்கு நிகரானது.
புலம்பெயர் அமைப்புக்கள் சில, இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்று நிரூபிப்பதற்காக தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கின்றன.
அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் அந்த இனம் பிரிந்துபோவதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
அந்த நம்பிக்கை சிறீதரனுக்கும் இருக்கலாம்.
ஆனால், அப்படியொரு நம்பிக்கை இருந்து, அதற்காக குரல்கொடுப்பது எனில் அவர் அதனை கூட்டமைப்பாக செய்யமுடியாது.
ஏனெனில், கூட்டமைப்பு பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வைக் காண ‘சுழியோடி’க் கொண்டிருக்கின்றது.
கூட்டமைப்பின் கொள்கைக்கு விரோதமாக அவர் தன்னிச்சையாக இப்படியொரு கோரிக்கையை முன்வைக்க முடியும் என்றால், சுமந்திரன் தன்னிச்சையாக எதனையாவது செய்வதையோ அல்லது பங்காளிக் கட்சிகள் செய்வதையே குறைகூறமுடியாது என்ற அந்த கனடாக்காரரின் வாதமும் சரியானதுதான்.
பிரிந்து போகின்ற உரிமையுடன் கூடிய தீர்வுக்கு அமெரிக்க இராஜதந்திரிகளின் ஆதரவைக் கேட்ட சிறீதரன், கடந்த செவ்வாயன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபை என்றும் அது இப்போது யாரிடம் இருக்கின்றது என்றும் வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மாகாண சபைகளை தமிழர்களின் பிரச்னைகளின் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக்கூட கொள்ளமுடியாது என்று கூறிக்கொண்டிருக்கும் சிறீதரன் போன்றவர்கள், எப்படி தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபையில் இப்போது யார் இருக்கின்றார்கள் என்று கேட்கமுடியும் என்பது தெரியவில்லை.
யாருக்காகக் கொண்டுவரப்பட்டதோ அவர்கள் அதனை வேண்டாம் என்னும்போது, அதனை வேண்டும் என்று கருதுபவர்கள் உபயோகப்படுத்துவதை சிறீதரன் போன்றவர்கள் எப்படிக் கேள்விக்கு உட்படுத்துவது என்று தெரியவில்லை.
அதை எழுதிக்கொண்டிருக்கும் போது முன்னர் சஞ்சிகை ஒன்றில் படித்த துணுக்கு ஒன்றுதான் ஞாபகத்துக்கு வந்தது.
கணவன் சொன்னான், ‘நம்ம பொண்ணை தீர விசாரிக்காமல் ஒரு முட்டாள் பயலுக்குக் கட்டிக் கொடுத்துட்டோம்..!’ என்று.
அதற்கு மனைவி சொன்னாள், ‘எங்கப்பா கூட இப்படித்தாங்க, நமக்கு கல்யாணம் ஆன பிறகு ரொம்ப நாள் புலம்பிக் கிட்டிருந்தாரு!’

  • ஊர்க்குருவி