நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்புரை!

0
157

கொழும்பு, கிராண்ட்பாஸ் – கஜிமாவத்தை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தினால், உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் இவர்கள் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தீ விபத்து சம்பவம் குறித்து அறிந்துகொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முப்படை தளபதிகள், கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.