கடந்த ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்ட வன்முறையின்போது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கொம்பனித்தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 22, 40 மற்றும் 55 வயதுகளையுடைய மூன்று சந்தேக நபர்களும் அங்குனகொலபலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக குழப்பம் விளைவித்த சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கியமை மற்றும் வாகனங்களைத் தாக்கி அசம்பாவிதங்களை ஏற்படுத்தியதாக குறித்த சந்தேகநபர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 37 வயதான இந்த நபர் மாலபே பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.