பசுபிக் பெருங்கடலில் புதிய தீவு: நாசா கண்டுபிடிப்பு.

0
283

அவுஸ்திரேலியாவிலிருந்து வெகு தொலைவில், தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை இம்மாத தொடக்கத்தில் வெடித்துச் சிதற தொடங்கியது. மத்திய டோங்காவில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடிப்பினால் கக்கப்பட்ட நீராவி மற்றும் சாம்பல், கடலில் கலந்து நீரின் நிறத்தையே மாற்றிவிட்டன. இந்த எரிமலை வெடித்து 11 மணி நேரத்தின் பின் பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து புதிய தீவு ஒன்று வெளிப்பட்டதாக நாசாவிற்கான புவி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அத்துடன் செயற்கைக் கோள்கள் மூலம் இத்தீவின் படங்களையும் படம்பிடித்துள்ளது. செப்டம்பர் 14ஆம் திகதியளவில் இத்தீவின் பரப்பளவு 4000 சதுர மீற்றராகவும், கடல் மட்டத்திலிருந்து 10 மீற்றர் உயரத்தில் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் செப்ரம்பர் 20ஆம் திகதியளவில் இத்தீவின் பரப்பளவு 24,000 சதுர மீற்றர் பரப்பளவாக பெருகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நீருக்கடியில் உள்ள எரிமலைகள் வெடித்துச் சிதறும்போது உருவாக்கப்படும் தீவுகள் போன்ற அமைப்புகள் பெரும்பாலும் குறுகிய காலமே நீடித்திருக்குமெனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை மத்திய டோங்காவிலுள்ள வவாயு மற்றும் ஹாபாய் தீவுகளில் வசிக்கும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் எரிமலை வெடிப்பால் அவர்களுக்கு பாதிப்பில்லை என்றும் டோங்கா புவியியல் சேவை மையம் தெரிவித்துள்ளது.