இப்படியும் நடக்கிறது…!

0
166

ஒரு காலத்தில் சட்டம் படித்தவர்கள் மட்டுமே தமிழர் அரசியலில் இடம்பெறலாம் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே சட்டம் படித்தவர்கள்கூட அப்போது இருந்தார்கள்.
இதற்கு, பாராளுமன்றங்கள் சட்டங்களைத் தயாரிக்கின்ற இடமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒரு சட்டத்தரணி என்றால், அவரிடம் ஒரு வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்று சென்றால், தான் ஒரு நீதிபதியாக இருந்து கேட்க வேண்டியவற்றை எல்லாம் நம்மிடம் கேட்டுத்தான் வழக்கை எடுத்து நடத்தலாமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பார்கள்.
இன்றும் நாங்கள் எமது அரசியலில் உள்ள ஒரு சட்டத்தரணியைப் பற்றியல்ல இரண்டு சட்டத்தரணிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் பற்றி இந்தப் பத்தியில் பார்க்க இருக்கின்றோம்.
திலீபனின் நினைவேந்தலோடு அதிகம் பேசப்பட்டவர் ஒரு சட்டத்தரணி.
அவர் திலீபனின் நினைவுதினம் பற்றி வெளியிட்ட விளக்கம் அவர் ஒரு சட்டத்தரணி தானா என்ற கேள்வியை எழுப்புவதை தவிர்க்க முடியாமல் இருந்தது.
நினைவுதினம் தொடர்பாக அது முடிந்ததும் அவர் வெளியிட்ட அறிக்கையில் விரிவான அறிக்கை ஒன்றை ஆதாரங்களுடன் எதிர்பாருங்கள் என்று அறிவித்திருந்தவர், மறுநாள் யாரோ பேசியதாக ஒவ்வொரு வரி
ஓடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
ஒருவர் பிரதான தீபத்தை எடுக்க முயல்வதையும் அதுதொடர்பான இழுபறியையும் கொண்ட மற்றுமொரு சிறிய துண்டு வீடியோ பதிவும்கூடவே வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில் அதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதையும் சொன்னால் – காட்டினால்தானே அந்த வீடியோ முழுமையாக இருக்கும் என்பது ஒரு சட்டத்தரணி அறியாததல்ல.
காவடி எடுத்து வந்தவர்கள் இறங்க முடியாத நிலையில் அந்தத் தீபம் வைக்கப்பட்டிருந்தது பற்றியும், அது முன்னணியினரால் வேண்டுமென்று அப்படி வைக்கப்பட்டிருந்ததாகவும் பல தரப்பினரும் புகார் தெரிவித்துவரும் நிலையில் அதனை அகற்ற முயன்றவரையே எல்லாவற்றுக்கும் காரணம் என்று சட்டத்தரணி நிரூபிக்க முயல்வது தமிழ் மக்கள் தலையில் பூச்சூடுவது போன்றது.
இன்னுமொரு சட்டத்தரணி, பழைய சம்பவம் ஒன்றை இப்போது நடக்கின்ற சம்பவங்களுக்காக அதனை ஞாபகப்படுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் கொழும்பில உள்ள முக்கிய இடங்கள் சிலவற்றை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தியிருந்தார்.
அதனை பல்வேறு தரப்பினரும் கண்டித்துவருகின்றனர் என்பது வேறு சங்கதி.
ஆனால், அதற்காக முன்னர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டில் வடக்கில் தமிழர்களின் காணிகளை பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்தமையை கண்டித்து நடத்திய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டமை பற்றிய படங்களுடன் அதனையும் இதனையும் முடிச்சுப்போட்டு சுமந்திரன் தனது சமூக வலைத் தளம் ஒன்றில் எழுதியிருக்கின்றார்.
கொழும்பில், அதி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்தனர்.
அந்தப் போராட்டம் எவ்வளவு நியாயமானதோ அதேபோல அந்த போராட்டக்காரர்கள் அத்துமீறி நடந்துகொண்டதும் தவறானதுதான்.
அத்தகைய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தியமையை கண்டிக்க வேண்டியதும் நியாமானதுதான்.
ஆனால், அதற்காக தமிழர் நிலங்களை உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அடாத்தாக அபகரித்தமைக்கு எதிரான போராட்டத்துடன் இதனையும் ஒப்பிட்டுப் பார்த்தமையை புரிந்து கொள்ள முடியவில்லை.
தமிழர் நிலங்களை அபகரித்தமையையும் ஜனாதிபதி செயலகம் போன்ற இடங்களை அதியுயர் பாதுகாப்பு பகுதியாக பிரகடனப்படுத்துவதும் நமக்கு ஒன்றுதான் என்கிறாரோ? – ஊர்க்குருவி