தமிழர்களின் எதிரிகள்?

0
151

ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுதான் தமிழ் மக்களின் முதன்மையான பிரச்னையாகும்.
அதிகாரமற்ற மக்களாக தமிழ் மக்கள் இருப்பதால்தான் அவர்களைச் சுற்றி இடம்பெறும் பல்வேறு விடயங்களில் அவர்களால் செல்வாக்கு செலுத்த முடியாமல் இருக்கின்றது.
அதிகாரப் பகிர்வின்றி நல்லிணக்கம் என்பது எப்போதும் சாத்தியமற்ற ஒன்றாகும்.
ஆனாலும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒன்றை அண்மைக்காலத்தில் பெறுவதற்கான சாதகமான அரசியல் சூழலும் இல்லை.
நல்லாட்சி அரசாங்கம் என்றழைக்கப்பட்ட ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில், அவ்வாறானதொரு வாய்ப்பு இருந்தது.
ஆனாலும், புதிய அரசியல் யாப்பு என்னும் மாயமானுக்கு பின்னால் போனதால் இறுதியில் காலம் வீணாகியது.
இவ்வாறானதொரு பின்புலத்தில், மாகாண சபை முறைமையை உச்ச அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்னும் வாதம் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தமிழர் பிரச்னையில் இந்தியா அதனை ஒரு கொள்கை நிலைப்பாடாகவே வைத்திருக்கின்றது.
இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே பல்வேறு சிங்கள அடிப்படைவாத தரப்புக்கள் எதிர்த்து வருகின்றபோதிலும்கூட, இன்றுவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் நிலைத்து நிற்கின்றது.
ஏனெனில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றிலுமாக இல்லாதொழிக்க முற்பட்டால் இந்தியாவின் தலையீட்டை எதிர்கொள்ள நேரிடும் என்பதால்தான் கடந்த 35 வருடங்களாக பலவாறான சிங்கள குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் 13ஆவது திருத்தச் சட்டம் நிலைத்து நிற்கின்றது.
13ஆவது திருத்தச் சட்டம் இறுதித் தீர்வில்லை என்று கூறினாலும்கூட, அதனைத் தாண்டிச் செல்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் எவராலும் கூறமுடியவில்லை.
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பில் பேசப்படும் சந்தர்ப்பங்கள் அனைத்திலும், இந்தியாவின் அறிவிக்கப்பட்ட கொள்கை நிலைப்பாடாக 13ஆவது திருத்தச் சட்டமே இருக்கின்றது.
13ஆவது திருத்தச் சட்டத்தைத் தாண்டிச் செல்வதை இந்தியா எதிர்க்கவில்லை.
ஆனால், இந்தியாவின் நிலைப்பாடாக அது மட்டுமே இருக்கின்றது.
அப்படித்தான் இருக்கவும் முடியும்.
ஏனெனில், அதுவே இந்தியாவால் கொண்டுவரப்பட்ட விடயம்.
ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில், இந்தியாவின் ஆதரவின்றி புதிய அரசியல் யாப்பு ஒன்றைக் கொண்டுவர முடியுமென்னும் நம்பிக்கையோடுதான் சம்பந்தன் செயல்பட்டிருந்தார்.
ஆனால், அது சாத்தியப்படவில்லை.
அதிலிருந்தாவது தமிழ்த் தேசிய தரப்புக்கள் விடயங்களை கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், அதுவும் நடக்கவில்லை.
அது நடந்திருந்தால் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதும் விடயத்தில் தேவையற்ற சலசலப்புக்கள் இடம்பெற்றிருக்காது.
தமிழ் மக்களின் பிரச்னையை கையாள்வதற்கான பக்குவமான அணுகுமுறைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய காலத்தில் தமிழ்த் தேசியம் என்னும் பெயரில் இடம்பெறும் விடயங்களை அவதானித்தால் கவலையளிக்கின்றன.
தமிழ் மக்களின் பிரதான பிரச்னைகளை மடை மாற்றும் நோக்கோடுதான் சிலர் திட்டமிட்டு இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுக்கின்றனரா – என்னும் கேள்வி எழுகின்றது.
அண்மையில் திலீபனின் நினைவு தினத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தமிழ் மக்களின் அரசியலை சீரழிப்பதற்கு வெளியிலிருந்து எவரும் வரவேண்டியதில்லை என்னும் நிலைமையே எடுத்துரைக்கின்றது. ஒருபுறம் தற்போதுள்ள சூழலில் ஓரணியாக நிற்கும் முயற்சிகள் குழப்பப்படுகின்றன.
இன்னொரு புறம் இவ்வாறான அரசியல் ஒழுங்கீனங்கள் இடம்பெறுகின்றன.
இதிலுள்ள ஆபத்தான விடயம் என்னவென்றால் இவ்வாறான விடயங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரால்தான் இடம்பெறுகின்றன.
உண்மையில் இப்போது தமிழ் மக்களின் எதிரிகளை வெளியில்தேடவேண்டியதில்லைபோலும். வெளியிலுள்ள எதிரிகளால் பிரச்னையில்லை.
ஏனெனில் அவர்கள் எதிரிகள் என்பதை எல்லோருமே அறியலாம்.