இப்படியும் நடக்கிறது…!

0
163

இருபத்தியிரண்டாவது அரசமைப்பு திருத்தம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படுவதற்கு முதலில் நடைபெற்ற ஆளுங்கட்சி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் சில பற்றி இப்போது அறிந்துகொள்ள
முடிந்தது.
கடைசி நேரம் வரை அது நிறைவேற்றப்படாது என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தனர்.
இந்த ஊர்க்குருவியும் தான்.
இது வென்றாலோ, தோற்றாலோ அதனால் ரணிலுக்கு எதுவுமில்லை என்ற நினைப்பு இந்த ஊர்க்குருவிக்கு.
ஆனால், அது வென்றால் ரணிலுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பது தெரிந்ததுதான்.
ஆனால், அவரிடமுள்ள அதிகாரம் குறைந்துவிடும் என்ற நினைப்புத்தான் தப்பானது.
இந்தத் திருத்தம் அவருக்கு இருக்கும் எந்த அதிகாரத்தையும் குறைக்கவில்லை என்பதை நமது சுமந்திரனின் பாராளுமன்ற பேச்சைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.
ஆக, இது நிறைவேறியதால் உள்ளூரில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் ரணில் நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார்.
எந்த அதிகாரத்தையுமே விட்டுக்கொடுக்காமலே தனது அதிகாரங்களை விட்டுக்கொடுத்த மற்றுமொரு தலைவர் என்ற பெயரை சம்பாதித்திருக்கிறார் ரணில்.
அதுவே, அவரின் அரசியல் ஆளுமையின் தனித்தன்மை.
இனி, கடந்த வாரம் இதுகுறித்து ஆராய்வதற்காக நடைபெற்ற ஆளும்கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.
கூட்டத்தில் முதலில் உரையாற்றியவர் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் இங்கு கருத்து வெளியிட்டார்.
இவர்கள் இருவரும் அரசமைப்பு திருத்தத்துக்கு எதிராக உரையாற்றினர்.
‘இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், இருபத்தியிரண்டை ஆதரிப்பதற்கு எவ்வாறு உடன்பட முடியும்? அதற்கு உடன்படுவது கடினம்’ என்றார் காரியவசம்.
சரத் வீரசேகர வழமை போன்று ஜனாதிபதிக்கான அதிகாரங்களை நீக்குவதற்கு எதிராகக் கருத்து வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கேட்கவிருந்த கேள்வியை ஜனாதிபதியிடம் கேட்டவர் மகிந்தானந்த அளுத்கமகேதான். ‘இந்தத் திருத்தத்தில் இரண்டரை ஆண்டுகளில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பாராளுமன்றம் கலைக்கப்படுமா, கலைக்கப்படதா என்று உறுதியளித்தால் எமது உறுப்பினர்கள் திருப்தியடைவார்கள்.’ என்றார்.
இந்த இருபத்தியிரண்டாவது திருத்தம் வராவிட்டாலும் ஏற்கனவே இருக்கின்ற இருபதிலும் இரண்டரை வருடங்களில் கலைக்கலாம் என்றுதான் இருக்கின்றது என்பது மகிந்தானந்தாவுக்கு தெரியாததல்ல.
அவரின் கவலை எல்லாம் ஜனாதிபதி ரணில் அப்படி கலைப்பாரா என்பது தான்.
அப்படி கலைப்பதெனில் வருகின்ற மார்ச் மாதத்துக்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதியால் கலைக்கமுடியும்.
மகிந்தானந்தவின் கேள்விக்கு ஜனாதிபதி ரணில் வெளிப்படையான பதிலை வழங்கினார்.
‘வெற்றிலையுடன் வந்து வணங்கினாலும் இரண்டரை வருடத்தில் பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன்.’ என்றார் ரணில்.
இந்தப் பதிலைக் கேட்டு அனைவரும் சிரித்தாலும் ஜனாதிபதியின் இந்த பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிந்ததால் அவர்கள் பெருமூச்சுவிட்டதையும் அவதானிக்க முடிந்ததாம்.
இனித்தான் அந்தக் கூட்டத்தின் ‘கிளைமாக்ஸ்’.
ராஜபக்ஷக்களை பாதுகாத்து சில காலம் அரசியல்செய்து வரும் காமினி லொக்குகே இரட்டை குடியுரிமை தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அது தொடர்பாக உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த ரணில், ‘இது என்னால் கொண்டுவரப்பட்ட அரசமைப்பு திருத்தம் அல்ல.
ஆனால், என்னிடம் கேட்கப்பட்டதால் பதில் தருகிறேன்.
இரட்டைக் குடியுரிமை தொடர்பான பிரேரணை என்னால் கொண்டுவரப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான் இந்தப் பிரேரணையை கொண்டுவந்துள்ளார்’ என்றாராம்.
கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக தயாரித்த இருபத்தியிரண்டாவது திருத்தமே ரணில் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆக, பஸில் பாராளுமன்றம் வருவதைத் தடுக்கவேண்டும் என்று நினைத்தவர் ரணில் அல்ல கோட்டாதான்.!

ஊர்க்குருவி