இப்படியும் நடக்கிறது…!

0
171

ஒருவர் டிசெம்பர் இரண்டாயிரத்து இருபத்தியோராம் ஆண்டு பதினெட்டாம் திகதி பிறந்திருந்தால் அவருக்கு இந்த ஆண்டு டிசெம்பர் பதினெட்டாம் திகதி அதாவது இன்று முதலாவது பிறந்தநாள்.
அவருக்கு ஒருவயது முடிந்து இரண்டாவது வயது தொடங்குகின்றது.
இப்படித்தான் நாம் அறிந்திருக்கின்றோம்.
ஆனால், நமது இலங்கை தமிழரசுக் கட்சி நாமறிந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஒன்பதாம் ஆண்டு டிசெம்பர் மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது இந்த ஊர்க்குருவி பிறந்தும் இருக்கவில்லை.
ஆனால், அப்படித்தான் தமிழரசின் வரலாறு எழுதப்பட்டிருக்கின்றது.
ஆனால், நேற்று முன்தினம் உதயன் பத்திரிகையின் ஆண்டுநிறைவு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வந்திருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.
சேனாதிராசா அண்ணர், கிளிநொச்சியில் தமிழரசின் எழுபத்தி ஐந்தாவது ஆண்டு விழாவை நடத்தவிருக்கின்றோம் என்று தெரிவித்தபோது, அட மனுசன் தனது கட்சியின் எழுபத்தி ஐந்தாவது ஆண்டு விழாவை நடத்துவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்டு வேலைசெய்கின்றராரே என்று எண்ணிக்கொண்டேன்.
அவர் எழுபத்தி ஐந்தாவது ஆண்டில்தான் அடுத்த பொதுச் சபையைக் கூட்டுவதற்காக காத்திருக்கிறார் போலும் என்றும் அப்போது எண்ணத் தோன்றியது.
கட்சியில் அவரின் தலைமைக்கு எதிராக அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் அதேவேளையில், விரைவில் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமித்து கட்சிக்கு புதிய இரத்தம் பாய்ச்சாதுவிட்டால் கட்சிக்கு என்ன ஆகுமோ என்ற எண்ணம் பலருக்கும் இருக்கின்றது.
கட்சியின் தலைமைப் பதவிக்கு ஏற்கனவே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிவைத்திருக்கின்ற விடயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையில் பேசப்படுவது பற்றியும் முன்னர் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
தமிழரசுக் கட்சிக்கு அடுத்த ஆண்டு டிசெம்பர் மாதம் பதினெட்டாம் திகதி எழுபத்து நான்காவது பிறந்தநாள்.
அதாவது எழுபத்து நான்கு வயது முடிந்து எழுபத்து ஐந்தாவது வயது தொடங்குகின்றது.
மாவை அண்ணர், எழுபத்தி ஐந்தாவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு தயாராகிவருகின்றோம் என்று சொன்னபோது அடுத்த ஆண்டு டிசெம்பரில் தான் அவர் ஆண்டுவிழாவோடு பொதுச் சபையையும் கூட்டி புதிய தலைவரை தெரிவுசெய்ய முடிவெடுத்தவிட்டாரோ என்று அப்போது எண்ணுவதைத் தவிர வேறு தெரியவில்லை.
ஆனால், இன்று பதினெட்டாம் திகதி கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் எழுபத்து ஐந்தாவது ஆண்டு தொடக்கவிழா நடக்கவிருப்பது பற்றியும் அதற்கான அழைப்பிதழ் ஒன்றும் நேற்று முன்தினம் வட்ஸ் அப்பில் வந்தபோது அட, இதைத்தான் மாவையர் சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தது.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை தொடங்கினார்.
மலையகத் தமிழர்களின் குடியுரிமையை இல்லாமல் செய்யும் இலங்கை குடியுரிமைச் சட்டத்தை தமிழ் காங்கிரஸ் ஆதரித்ததைத் தொடர்ந்தே தந்தை செல்வா காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழரசை தொடங்கினார்.
ஒருவேளை, அவர் காங்கிரஸிலிருந்து பிரிவதற்கு காரணமான குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட நாற்பத்தி எட்டாம் ஆண்டே தமிழரசு பிறந்துவிட்டது என்று கருதினார்களோ தெரியவில்லை.
அப்படிக் கருதியிருந்தாலும் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட நவம்பர் மாதம் வரையாவது பொறுத்திருக்க வேண்டாமா?
எழுபத்து ஐந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாட ஏன் இந்த அவசரத்தை காட்டுகிறார்கள் என்று ஊடக நண்பர் ஒருவரிடம் கேட்டேன், அவர் சொன்னார் – சிலவேளை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டில் அதன் தலைவரை மாற்றுவது பொருத்தமாக இருக்காது என்று ‘சென்ரிமென்ற்ராக’ தலைமைப் பதவியில் மாவை தொடர்வாரோ என்னவோ என்று.
ஒருவரின் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாடுவது அபசகுணம் என்ற நம்பிக்கை ஒன்று நம் மத்தியில் உண்டு.!

  • ஊர்க்குருவி.