மின்சார சபை சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில், இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது அமைச்சரவை அமைச்சர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் கட்டணத்தை மாற்றுவதற்கு இந்த தரப்புக்களுக்கு அதிகாரம் இல்லை எனவும், மின்சாரக் கட்டணத்தை அறிவிப்பதற்கான முழு அதிகாரமும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, பொது கலந்தாய்வை நடத்தி, கட்டண திருத்தத்தின் சதவீதத்தை முடிவு செய்யும், என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அறிவிப்பு அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முரணானது என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டண உயர்வுக்குப் பின்னர் மின் உற்பத்திக்கான நிதிச் செலவுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஓரளவுக்கு ஈடுசெய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே, தற்போதைய செலவை பிரதிபலிக்கும் 65 சதவீத கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.