இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தாமதமடைவதானது, கடன் வழங்கிய நாடுகளுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் (IMF)எச்சரித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில், சீனா, இந்தியா உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள், மறுசீரமைப்பை விரைவுபடுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் மூலோபாயக் கொள்கை மற்றும் மீளாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மார்க் ப்ளெங்கன் தெரிவித்துள்ளார்.
கடன் மீளச் செலுத்தப்படாமையானது, கடன் பெற்ற நாடுகளுக்கும், கடன் வழங்கிய நாடுகளுக்கும், கடுமையான மற்றும் மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதன்மூலம், உலக பொருளாதாரத்திற்கும் கடுமையான தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், கடன் மறுசீரமைப்பை விரைவுபடுத்துவது, வளர்ந்த நாடுகளின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவரின் வலியுறுத்தலின் பிரகாரம், மறுசீரமைக்கப்பட வேண்டிய கடன், குறைந்த மட்டத்தில் இருக்கும்போது, மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால், வளர்ந்த நாடுகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகரிக்கும் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இதன்மூலம், கடனை மீளப்பெற்றுக்கொள்ளும் திறன், பெருமளவில் குறைவடையும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இவ்வாறான நிலையில், கடன் மறுசீரமைப்பு விரைவாகவும், ஒத்துழைப்புடனும் இடம்பெறாவிட்டால், உலக பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கம் ஏற்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலோபாயக் கொள்கை மற்றும் மீளாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மார்க் ப்ளெங்கன் எச்சரித்துள்ளார்.