முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 2012 ஆம் ஆண்டு, வர்த்தமானி மூலம், ஒதுக்க வனப் பகுதிகளாக அடையாளப்படுத்தப் பட்ட பகுதிகளை விடுவிப்பது தொடர்பில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில், இன்று கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைதீவு மாவட்ட த்தின், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் குடியேறி வசித்து வரும், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, பயிர் செய்கை காணிகள் இதுவரை இல்லாத நிலையில், பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலும், கைவிடப்பட்ட வயல் நிலங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரால், தொடர்ச்சியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இன்று, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில், மாவட்ட வன வள உத்தியோகத்தர், நில அளவையாளர் மற்றும் பிரதேச செயலக காணிக் கிளை பதவி நிலை உத்தியோகத்தர்கள், உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர், குறித்த பகுதிகளுக்கு கள விஜயம் செய்து, வன வளத் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
அதாவது, மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, ஒட்டறுத்தகுளம், வன்னிவிளாங்குளம், மூன்று முறிப்பு, சிராட்டிகுளம், நட்டங்கண்டல், அம்பாள்புரம் உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளில், 2012 ஆம் ஆண்டு, வன வள திணைக்களத் தினால், வர்த்தமானி மூலம் ஒதுக்க காடுகளாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள பகுதிகளை, அதிகாரிகள் பார்வையிட்டதுடன், குறித்த பகுதிகளை விடுப்பது தொடர்பில், பிரதேச செயலகத்தில் கலந்துரையாடியுள்ளனர். இதில், சாதகத் தன்மைகள் காணப்படும் நிலையில், குறித்த இடங்கள் விடுவிக்கப்படும் போது, 570 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைய முடியும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
Home வடக்கு செய்திகள் முல்லைத்தீவு மாந்தை கிழக்கில், ஒதுக்க வனப் பகுதிகளை விடுவிப்பது தொடர்பில், கள விஜயம்