மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஊவா மாகாணத்திலுள்ள சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரை யாடலும், தேர்தல் பிரச்சார ஆரம்பக்கூட்டமும் பண்டாரவளை, மாநகரசபை மண்டபத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று நடைபெற்றது. இ.தொ.காவின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி, ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவலிங்கம், வேட்பாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.