இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்! : உதய கம்மன்பில

0
215

அமெரிக்க புலனாய்வு முகவரான சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் கடந்த பெப்ரவரி மாதம் இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த நிலையில் நாட்டுக்கு வந்தவர்கள் யார் என்று கேள்வியை தாம் தொடர்ந்து எழுப்பிவந்த போதும், அரசாங்கமும், அமெரிக்காவும் எந்தவித பதிலும் கூறாது மௌனத்தைக் கடைப்பிடித்து வருவதாகவும் இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நான்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்மொழிவுகளில், அமெரிக்காவுடன் உளவுத்துறை பகிர்வு நோக்கத்திற்காக புலனாய்வுப் பகுப்பாய்வு மையம் ஒன்றை அமைப்பதும் உள்ளடங்குவதாகவும் இந்த யோசனை, முதன்முதலில் 2002ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு உள்ளூர் புலனாய்வு சமூகத்தின் கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் அப்போதைய அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்ததாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முன்மொழிவு, அமெரிக்கா தமது அணுகலின் கீழ் இலங்கைக்கு பயோமெட்ரிக் குடிவரவு கட்டுப்பாட்டு முறையை பரிசாக வழங்குவது – இவ்வாறான நடவடிக்கைகள், சீன மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் வர்த்தகம் செய்வதைத் தடுக்கும் அல்லது பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றாவது முன்மொழிவில், நீர்மூழ்கிக் கப்பல் தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் தரவுகளுக்கான அணுகல்கள் அடங்குவதாகவும்
இதற்காக இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்களை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இறுதி யோசனையானது, இரு நாடுகளுக்குமிடையிலான சோபா என்ற படைகளின் நிலைப்பாடு குறித்தது என்றும் எனினும் இறுதி யோசனையைத் தவிர, ஏனைய யோசனைகளுக்கு ஜனாதிபதி உடன்படவில்லை எனவும் இலங்கையின் தேசிய பாதுகாப்பில் விட்டுக்கொடுப்புக்கள் ஏற்பட்டால், பனாமாவின் தலைவிதி இலங்கைக்கும் ஏற்படும் என்றும் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.