ஜனநாயக உரிமைக்காகப் போராடும் மக்களை எச்சரிக்கும் உதய கம்மன்பில!

0
215

தேர்தலை நடத்த இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவுக்கு வாக்குறுதி வழங்கிய காரணத்தினால்தான் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்புக்கு அமைய தீர்மானங்களை முன்னெடுத்தாலும், பொதுஜன பெரமுன தேர்தலுக்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரம்தான் தேர்தல் இடம்பெறும் என பெரமுனவின் உள்ளக பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவுக்கு வாக்குறுதி வழங்கியதால் தான் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜே.ஆர். ஜெயவர்தனவின் கொள்கையை பின்பற்றுகிறார். ஆகவே, ஜனநாயக உரிமைக்காக போராடும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படும்போது போர்க்கொடி தூக்கிய கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை கண்டும் காணாதது போல் இருப்பது கவலைக்குரியது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.