நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்கொல்ல அணைக்கு அருகில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நான்கு பாடசாலை மாணவர்கள் பொல்கொல்ல அணைக்கட்டுக்கு கீழே சுமார் 300 மீட்டர் தூரத்தில் நீந்திக் கொண்டிருந்த போதே இவ் விபத்து நேர்ந்ததாகவும் அவர்களில் இருவர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், நீரில் மூழ்கிய இரு மாணவர்களும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டதுடன் அவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கண்டி, தித்தவெல வீதி பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மற்றைய மாணவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அங்கு நீராடச் சென்ற வேளையில் 12 வயது சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.