இப்படியும் நடக்கிறது…!

0
123

அரசியல் விமர்சகர் என்று மட்டும் அவரை சுருக்கிவிட முடியாது என்று பல தடவைகள் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருக்கின்றேன்.
பனங்காட்டான் பற்றி இந்தப் பத்தியில் பல தடவை குறிப்பிட்டாகிவிட்டது.
நேற்று முன்தினம் வெளியாகியிருந்த அவரின் கட்டுரை பற்றியே இப்போது பலரும் பேசி வருவதை அவதானிக்க முடிகின்றது.
‘தமிழ் மக்களின் தலைவிதியையே தீர்மானிக்கின்ற நிலையில் இருந்த ஒரு பாரம்பரிய கட்சிக்கு தலைவரை தேடி ‘சூம்’ வழியே கூட்டம் நடக்கின்றது’, என்று அவர் எழுதிய அந்தச் செய்தி பற்றியே பலரும் பேசிவருவதைக் காணமுடிகின்றது.
பலரும் ‘அது உண்மையா…? உண்மையா…’, என்று இந்த ஊர்க்குருவியிடம் கேட்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை உணரமுடிந்தது.
இவ்வாறான ‘சூம்’ வழி கலந்துரையாடல் இரண்டு நடத்தப்பட்டன எனவும் ஒரு கூட்டம் சுமந்திரனுடன் என்றும் மற்றையது தமிழரசின் சிரேஷ்ட உபதலைவர்
சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுடன் என்றும் பனங்காட்டான் தகவல் தந்திருந்தார்.
இரண்டு பேருடனும் முக்கியமாக பேசப்பட்டது மாவையிடமிருந்து எப்படி தலைமைப் பதவியை ‘பறிப்பது’ என்பது பற்றியதுதான்.
அந்த இருவரில் ஒருவர் கட்சித் தலைமைக்கு குறி வைத்திருப்பவர்.
மற்றையவர் மிக அண்மைக்காலம்வரை மாவையின் வலது கரமாக வலம் வந்தவர்.
மாவையை எப்படி தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றலாம் என்பது குறித்து ஆராய்வது, அவரை நன்கு அறிந்த ஒருவருடன்தான் பேசவேண்டும் என்பதை கட்சியின் அந்த வெளிநாட்டுக் கிளையினர் நன்றாகத்தான் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
அதைவிட முக்கியமானது, அவர் சுமந்திரனின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருக்கும் சிறீதரனுடன் நெருக்கமான உறவைக் கொண்டிராதவர்.
தமிழரசு கட்சியின் கனடா கிளையும் லண்டன் கிளையுமே இயங்கிக்கொண்டிருப்பவை.
அதிகம் சொல்வதானால் தாயகத்தில் கட்சியின் செயல்பாடுகளைவிட கனடாவில் கட்சியின் செயல்பாடு அதிகமானது.
அவர்களே கட்சியில் பல விடயங்களில் முடிவெடுப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
தலைவரை மாற்றுவதில் அவர்களின் இலக்கு எதுவாக இருக்கும் என்பது இரகசியமானதல்ல.
அவர்கள் கட்சியின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொள்பவர்களாக இருந்திருந்தால், கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடப் போவதாகப் பகிரங்கமாகவே கூறிவரும் சுமந்திரனுடனும் சிறீதரனுடனும் பேசியிருக்கவேண்டும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுமந்திரனை ஆதரித்து – அவரை அன்ரன் பாலசிங்கம் ‘றேஞ்சுக்கு’ உயர்த்தி அவருக்காக பிரசாரம் செய்ததால் சிறீதரன் இழந்தது கொஞ்சமல்ல.
இருபத்தி ஐயாயிரம் வாக்குகளை.
தனது அரசியல் வாழ்க்கையையே பணயம் வைத்து சுமந்திரனை ஆதரித்தவர்.
அவர் அப்படி செய்யவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்பது சுமந்திரனுக்கு மாத்திரமே தெரிந்தது.
தனக்கு தேர்தலில் ஆதரவு வழங்கினால் அவரை கட்சியின் தலைவராக ஆக்குவதில் அவருக்கு ஆதரவாக நிற்பேன் என்று சுமந்திரன் தனக்கு வாக்குறுதி தந்ததாகவும் அதனை அவர் காப்பாற்றவேண்டும் என்றும் சிறீதரன் பொதுவெளியில் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதனை இதுவரை சுமந்திரன் மறுத்ததாகவும் தெரியவில்லை.
அவர் அப்படி வாக்குறுதி வழங்கியிருந்தாலும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது கட்டாயமானது என்று அரசியல் அகராதியில் சொல்லப்படவுமில்லைத்தான்.
எந்த வாக்குறுதியைத்தான் அரசியல்வாதிகள் இதுவரை நிறைவேற்றியிருக்கின்றார்கள்? அதுவல்ல, நாம் இன்று சொல்ல வருவது.
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து வெளியேற மாவை உடன்பட்டு கட்சிக்கு புதிய தலைவர் தெரிவுக்காக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமானால் இருவர் போட்டியிடுவது உறுதியாகியிருக்கின்றது.
அப்படி இருவர் போட்டியிட்டால் கட்சி பிளவுபட்டுவிடும் என்று பலரும் ஆரூடம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழரசு கட்சியின் தலைவர் விவகாரத்தால் கட்சி பிளவுபட்டுவிடும் என்று அச்சமடைவதால் அப்படி நடந்துவிடக்கூடாது என்று கட்சியின் இந்த வெளிநாட்டுக்கிளைகள் நினைக்கின்றனவா அல்லது தாம் விரும்புகின்ற ஒருவரிடம் கட்சித் தலைமையை மாற்றிவிடவேண்டும் என்று நினைக்கின்றனவா என்பது
தெரியவில்லை.
மாவை கட்சியின் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவரா என்பது வேறு விடயம்.
ஆனால், அவர் கட்சியை- அதன் கொள்கையை எந்தக் கட்டத்திலும் அடகு வைக்கக்கூடியவர் அல்ல.
கட்சிக்கு யார் பொருத்தமான தலைவர் என்பதை தாயகத்திலுள்ள கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களே முடிவெடுக்கவேண்டும்.
அதைவிடுத்து அவரிடமிருந்து கட்சித் தலைமையைப் பறித்து வேறு ஒருவரிடம் கொடுக்க வெளியார் முயலக்கூடாது.

  • ஊர்க்குருவி