இழப்பீட்டுத் தொகைக்காக மனைவியைக் கொன்றவர் கைது

0
134

காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்காக மனைவியைக் கொன்ற கணவனை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிடிகல மானம்பிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த பெண் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வாகன விபத்தில் உயிரிழந்தார்.

ஜீப் வண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அதனை ஓட்டிச் சென்ற நபர் ஜீப்புடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நிரோஷா உதயங்கனி என்ற 40 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் மோட்டார் சைக்கிளில் விபத்து நடந்த இடத்திற்கு அவருடன் வந்து, அந்த இடத்தில் அவரை இறக்கிவிட்டு, தலைக்கவசத்தை உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து சென்றதை அடுத்தே விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பிடிகல பொலிஸார் முதலில் விபத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியை கண்டுபிடித்தனர்.

விசாரணைகளின்போது, ​​குறித்த ஜீப் வண்டியை உயிரிழந்த பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் வாடகை அடிப்படையில் எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் இறந்த பெண்ணின் கணவரை பொலிஸார் கைதுசெய்து விசாரணை நடத்தியதில் இறந்த பெண்ணின் கணவரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த விபத்து நடந்தமை தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் குறித்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வெளிநாட்டில் இருந்த போது ஈட்டிய பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் அவரின் மூன்று காப்புறுதிகளின் மூன்று கோடி ரூபா பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்த கொலையை திட்டமிட்டதாக பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை குறித்த ஜீப் வண்டியை செலுத்திய நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.