அடுத்த வருடத்தில் இருந்து கல்வி – சுகாதாரத்திற்கு அதிகளவிலான நிதி – ஜனாதிபதி

0
146

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு, அடுத்த வருடத்தில் இருந்து அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தா மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் என தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, வீடமைப்பு ஆகிய விடயங்களுக்காக மாத்திரம் சலுகை வழங்கல் செயற்பாடுகளை மட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘வாழ்க்கைக்கு திறன் – திறனுக்கு தொழில்’ என்ற தொனிப்பொருளின் கீழ், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்கில்ஸ் எக்ஸ்போ 2023 கண்காட்சியை ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.

நாளை வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம்.

சிறிலங்கா ஸ்கில்ஸ் எக்ஸ்போ 2023 கண்காட்சியின் ஊடாக நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கொள்கை தயாரிப்பாளர்களுக்கும் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்பதோடு, துறைசார் திறன் விருத்தியின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கும் வலுவானதொரு பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா ஸ்கில்ஸ் எக்ஸ்போ 2023 கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி கண்காட்சியை பார்வையிட வந்தவர்களோடும் கலந்துரையாடினார்.

தொழில்நுட்ப விவசாய வேலைத்திட்டத்திற்கான இணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றதோடு, தொழில்நுட்ப விவசாயக் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலான் ட்ரோன் பாவனையை ஊக்குவிக்கும் விதமாக ட்ரோன் தொழில்நுட்பவியலாளர்கள் மூவருக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல், கமல் குணரத்ன மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.