கதிர்காம பாதயாத்திரையை முன்னிட்டு உகந்தைமலை முருகன் ஆலயத்தில் சிரமதானப்பணி

0
247

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இன்று திறக்கப்படும் நிலையில் கதிர்காம யாத்திரிகர்களின் நன்மை கருதியும் ஆலய மகோற்சவம் நடைபெறவுள்ளதை முன்னிட்டும் அம்பாரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மாபெரும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.


ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி, களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேச செயலகங்களும் இப்பணியில் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பபாகரன் தலைமையில் இடம்பெற்ற பணியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியான முறையில் ஆலய வளாகத்தில் இருந்த பற்றைகள், குப்பைகள் அகற்றப்பட்டதுடன் நீராடுவதற்கு பயன்படுத்தும் கிணற்றை அண்டிய பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன.


இதேவேளை பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இன்று திகதி திறக்கப்பட்டு 25ஆம் திகதி மூடப்படுகின்றது.


விசேட பூஜைகளும் இடம்பெற்றுவருவதுடன் பக்தர்கள் நன்மைகருதி வைத்தியர்கள் குழாம் இணைந்து இலவச வைத்திய சேவையினை வழங்கி வருவதையும்
அவதானிக்க முடிந்தது.


இவ்வருடம் சுமார் 45000 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


பொலித்தீன் பாவனை மற்றும் சிறிய தண்ணீர்போத்தல்களை கொண்டு செல்வதை தடை செய்துள்ளதாகவும் கருத்துரைக்கப்பட்டுள்ளது.


மேலும் சிறுவர் தொடக்கம் முதியவர்கள் வரை ஆண்;கள் பெண்கள் என அனைவரும் கலாசார ஆடையுடன் மாத்திரம் யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் என
அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


பாதயாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு சுகாதார சேவைகள் குடிநீர் வசதி போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


குடிநீரை வழங்க லாகுகல பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் சிவதொண்டர் அமைப்பு மற்றும் தம்பிலுவில்; சைவநெறி கூடம் மற்றும் சேவற்கொடியோன் உள்ளிட்ட அமைப்புக்களும்; பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.