தமிழ்த் தேசிய அரசியல் தொடர்ந்தும் தோல்வியின் பாதையில் பயணிப்பது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் சுட்டிக் காட்டியிருக்கின்றோம்.
சூழ்நிலைகளை துல்லியமாகக் கணித்து குறிப்பிட்ட சூழலிலுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் அவசியம் தொடர்பிலும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மட்டத்தில் காணப்படும் அதிருப்திகளையும் நாம் அறிவோம்.
ஆனால், ஒரு பொறுப்புள்ள ஊடகமென்னும் வகையில் உண்மைகளை அடித்துக் கூறுவதிலிருந்து நாம் விலகிநிற்க முடியாது.
அரசியலை சரியான திசைவழி நோக்கி நகர்த்த வேண்டுமாயின் சுயவிமர்சனம் சார்ந்த பார்வை கட்டாயமானது.
யுத்தம் நிறைவுற்று 14 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும்கூட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் சிறியளவில்கூட பூர்த்திசெய்யப்படவில்லை.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால், யுத்தத்துக்கு பின்னரான அரசியல் சூழலிலும் தமிழர்களால் வெற்றியின் பாதையில் பயணிக்க முடியவில்லை.
இருக்கின்ற நிலையிலிருந்து முன்னோக்கி நகர்வதையே, இங்கு வெற்றியென்று குறிப்பிடுகின்றோம்.
2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின்போது சில வாய்ப்புகள் கிடைகப்பெற்றபோதிலும்கூட, அதனை தமிழ் தலைமைகள் என்போர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் சறுக்கிவிட்டுப் பின்னர், மற்றவர்களை குற்றஞ்சாட்டுவதில் எவ்வித பயனுமில்லை.
இப்போது ரணில் தலைமையிலான பலவீனமான அரசாங்கம் மீண்டும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் பேசிவருகின்றது.
சர்வதேச அரங்குகளிலும் நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் ரணில் பேசிவருகின்றார்.
நல்லிணக்க முயற்சியில் தமிழர் பக்கம் ஒரு வாய்ப்புண்டு.
இன்னொரு வகையில் நல்லிணக்கம் என்பது தமிழருக்கான பேரம்பேசும் பலமாகும்.
ஏனெனில், தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் அது நல்லிணக்கம்.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் யுத்தத்தில் தமிழர்களை வெற்றிகொண்டதாக சிந்திக்கும் சிங்கள அரசியல் சமூகம் நல்லிணக்க முயற்சியில் வெற்றிபெற வேண்டுமாயின், தோற்கடிக்கப்பட்டதாகக் கருதப்படும் தமிழர்களின் ஆதரவு அவர்களுக்கு தேவை.
தமிழ் மக்களைப் புறக்கணித்து எதேச்சதிகாரமாகவும் அவர்கள் செயல்படலாம்.
கோட்டாபய அவ்வாறனதொரு நகர்வை மேற்கொள்ளவே முயற்சித்தார்.
அவ்வாறு அவர்கள் செய்ய நினைத்ததால் அதில் பிரச்னையில்லை.
ஆனால், நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டதாக அவர்களால் உலகத்தை நம்பவைக்க முடியாது.
இந்த இடத்தை தமிழ் தலைமைகள் என்போர் புத்திசாதுர்யமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் ஆதரவு தேவைப்படும் இடத்தை ஒரு பேரம் பேசும் உத்தியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
படிப்படியாக முன்னேற்றங்களை காண்பியுங்கள் எங்களின் ஆதரவைத் தருகின்றோம் என்றவாறான அரசியல் தந்திரத்தை கையாளலாம்.
ஏனெனில், தமிழ் மக்களின் ஆதரவின்றி நல்லிணக்கத்தில் வெற்றியென்பது ஒருபோதுமே சாத்தியமற்றது.
ஏனெனில், நல்லிணக்கத்தில் தமிழர்கள் சம பங்காளிகளாவர்.
இந்த பின்புலத்தில்தான் தமிழ் தலைமைகளின் ஆதரவுடன் விடயங்களை முன்னெடுக்க ரணில் முயற்சிக்கின்றார்.
ஆனால், ரணில் என்னும் ஒரு தனிநபரை நம்பி செயல்படுவது புத்திசாதுர்யமானதல்ல.
வாய்ப்புகளை முன்வைத்து, அதனை கையாள்வதில் மட்டுமே தமிழ் தலைமைகள் சிந்திக்கவேண்டும்.