நண்பர் ஒருவர் ஒரு விழாவுக்கு அழைத்திருந்தார்.
அந்த நேரத்தில் இந்த ஊர்க்குருவி கொழும்பில் இருந்தார்.
அவர் அழைத்த அன்று மாலைதான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பவிருந்தேன்.
‘நான்கு மணிக்கு கூட்டம் ஆரம்பமாகின்றது என்கிறீர்கள்.
நான் வந்து சேர ஐந்து மணிக்கு மேல் ஆகிவிடுமே’ என்றேன்.
அதற்கு அவர் சொன்னார், ‘அது நான்கு மணி என்றுதான் நோட்டீசில் போட்டிருக்கின்றோம்.
ஆனாலும் சனங்கள் வந்துதொடங்க எப்படியும் ஐந்து மணி ஆகிவிடும் தானே.
நீங்கள் கட்டாயம் வந்துவிடுங்கள்’ என்றார் நண்பர்.
இது நமது நிகழ்ச்சிகள் நடக்கின்ற லட்சணத்தை எடுத்துச் சொல்வதற்காக உங்களுடன் பகிர்ந்து கொண்டது.
நல்லூரில் கந்தன் ஆலயத்தில் இப்போது உற்சவம் தொடங்கி நடந்து வருகின்றது.
சுவாமி வெளியே வருகின்றபோது போய், சுவாமி கோவிலுக்கு உள்ளே போனதும் வீடு திரும்புவது வழமை.
சுவாமி வெளியே வருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக போய்விட்டு காத்திருப்பேன்.
சுவாமி வெளியே வருகின்றபோது மணிக்கூட்டைப் பார்க்கத் தேவையிருக்காது.
சரியாக ஆறு மணி ஆகியிருக்கும்.
அதேபோலத்தான் சுவாமி கோவிலுக்குள் போகின்றபோது நேரம் சரியாக ஏழு மணிஆகியிருக்கும்.
இப்படியொரு ஒழுங்கு யாழ்ப்பாணத்தில் எந்தக்கோவிலிலும் இருப்பதாக தெரியவில்லை.
இந்த ஊர்க்குருவிக்கு தெரியாமல் எங்காவது இருக்கலாம்.
ஆனால் பெரும்பாலான கோவில்களில் இத்தனை ஒழுங்குமுறையுடன் காரியங்கள் நடப்பதாக தெரியவில்லை.
ஓர் ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெறுகின்றது என்றால் அங்கே பக்தர்கள் திரண்டு வருவது தவிர்க்க முடியாததுதான்.
தேர்த்திருவிழா என்றால் இப்படி பெருந்தொகையான பக்தர்கள் வருவார்கள் என்பதாலேயே சிலர் அவற்றை தவிர்ப்பதற்காக தாமதமாக கோவிலுக்கு செல்வதும்
உண்டு.
சிலர் தேர் முதல் முதலில் அசையத் தொடங்கும்போது பார்க்கவேண்டும், அந்தக் காட்சியை காணவேண்டும் என்று விரும்பி தேர் ஓடத் தொடங்கும்போது
பார்க்க வருவார்கள்.
சிலர் தேரில் இருந்து சுவாமி பச்சை சாத்தி பூசை முடிந்து கோவிலுக்குள் போகும்போது பார்க்கவேண்டும் என்று வருவார்கள்.
வேறும் சிலர் தேரில் சுவாமி வீற்றிருக்கும்போது அர்ச்சனை செய்யவேண்டும் என்று வருவார்கள்.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும்.
அப்படியிருக்கும் போது தேர்த்திருவிழா காலை எட்டு மணிக்கென்றால், ஒன்பது பத்து மணிக்கு தேர் ஆலயத்தைச் சுற்றி உலா வந்து முடிந்துவிடும் என்பதை கணக்கிட்டு பக்தர்கள் கோவிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
இப்போது யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு எங்கும் ஆலயங்களில் உற்சவங்கள் ஆரம்பமாகி நடந்து வருகின்றன.
சில ஆலயங்களில் எட்டு மணிக்கு தேர் உற்சவம் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும் காலை பதினொரு மணிவரை தாமதமாகின்றன என்கின்றன சில செய்திகள்.
இவ்வாறு தாமதமாவதால் தேர் உலா முடிந்த பின்னர் தரிசனம் செய்வோம் என்று ஆலயத் திற்கு வருகின்றவர்களும் வந்துசேர்ந்து விடுவதால் மக்கள் கூட்டம் அளவுக்கதிகமாகி பக்தர்கள் பல அசௌகரியங்களை அடைய நேரிட்டதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
அதிகம் ஏன், அண்மையில் ஓர் ஆலயத்தில் இருபத்தி ஐந்து பவுணுக்கும் அதிகமான நகைகள் திருட்டுப்போனதாகவும் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.
அதற்காக அவ்வாறு சனநடமாட்டம் அதிகமான இடங்களுக்கு ஏன் நகைகளை போட்டுக்கொண்டு வருகிறீர்கள் என்று கேட்பதும் சரியானது அல்ல.
அது அவரவர் விருப்பங்கள் சம்பந்தப்பட்டது.
ஆனால், மக்கள் அளவுக்கதிகமாக கூடுவதை தவிர்க்கின்ற வகையில் ஆலயங்கள் சரியான நேர அட்டவணைகளை பயன்படுத்தி, பக்தர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவினாலும் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கலாம்.
- ஊர்க்குருவி.