இப்படியும் நடக்கிறது

0
157

இப்போதெல்லாம் அரசியல் ஆய்வாளர்களாக இருக்கலாம், பத்தி எழுத்தாளர்களாக இருக்கலாம், எல்லோருமே நடந்து முடிந்த மனித சங்கிலிப் போராட்டம் பற்றியே எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
லண்டனிலிருந்து தோழர் தம்பா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார், மருதனார்மடத்திலிருந்து முட்டாஸ் கடை சந்திவரை இருக்கும் தூரத்துக்கு மனித சங்கிலியாக மக்கள் நிற்கவேண்டுமெனில் அண்ணளவாக ஆயிரத்து ஐநூறுபேர் போதுமானது.
எங்கள் பதினொரு எம். பிக்களும் ஆளுக்கு நூறு பேரைத் திரட்ட முடியாமலா இருக்கின்றனர்? என்று.
அவருடன் தர்க்கிக்க வேண்டியதாயிற்று, போராட்டத்துக்கு ஆட்களை திரட்டுவது என்பது முடியுமானதா அல்லது முடியாதா என்பது வேறு சங்கதி.
ஆனால், ஏன் அப்படி திரட்டவேண்டும் என்று நினைத்தார்களோ தெரியவில்லை என்றேன்.
அவருடன் அதுபற்றி கதைத்தபோது- அல்லது தர்க்கித்தபோதுதான் எனக்கு அந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.
தமிழரசின் தளபதி அமிர்தலிங்கமும் காங்கிரஸின் தளபதி சிவசிதம்பரமும் தேர்தலில் தோற்றுவிட்ட பின்னர், கீரியும் பாம்புமாக இருந்த தமிழரசு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்றிணைந்திருந்த சில மாதங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
அதாவது தமிழ் தேசிய அரசியல் என்பது நீறுபூத்த நெருப்பாக தகதகித்துக்கொண்டிருந்த காலம் அது.
வடக்குக்கு வரும் அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டி எமது எதிர்ப்பை தெரிவிப்பது என்பதுதான் போராட்டம்.
அப்படி அறிவித்த பின்னர் முதலாவதாக யாழ்ப்பாணத்துக்கு அப்போதைய நிதி அமைச்சர் என்.எம்.பெரேரா விஜயம் செய்யவிருந்தார்.
அமைச்சர் என்.எம்.பெரேராவின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்றும், போராட்டத்தில் கலந்துகொள்ள
நல்லூரிலுள்ள சிவசிதம்பரம் வீட்டில் ஒன்றுகூடுமாறும் தமிழர் விடுதலைக் கூட்டணி அழைப்பு விடுத்திருந்தது.
அப்போது வாலிபனாக இருந்த இந்த ஊர்க்குருவியாரும் நல்லூரில் சிவசிதம்பரம் வீட்டில் பிரசன்னமாகியிருந்தார்.
அப்போது அங்கே சில பத்து பேரே வந்திருந்தனர்.
கூட்டணியின் நிர்வாகச் செயலாளரான பண்டிதர் கா.பொ.இரத்தினம் ஐயா ஒரு மேசையில் இருந்துகொண்டு வந்திருந்த தொண்டர்களின் பெயர் முகவரிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
அவ்வாறு எடுக்கப்பட்ட அந்த காகிதத்தில் தலைப்பாக கறுப்புக்கொடி போராட்ட வீரர்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
வந்திருந்தவர்கள் எல்லோரும் தத்தமது பெயர் முகவரியை பண்டிதரிடம் கொடுத்துவிட்டு தமக்கு கொடுக்கப்பட்ட கறுப்புக்கொடிகளுடன் பலாலி வீதியில் ஓர் இடத்தில் கூடியிருந்தனர்.
மாலை நேரம் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.
என்.எம்.பெரேரா வரவிருந்த விமானம் வருவது தாமதமாகிக்கொண்டே இருந்தது.
நன்றாக இருட்டிவிட்ட நேரத்தில் அங்கு வந்த பொலிஸ் அதிபர் எல்லோரையும் வீதியில் இருந்து இறங்கி கரையில் இருந்த வயலுக்குள் நிற்குமாறும், வீதியில் தடை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ள எல்லோரும் வயலில் இறங்கிவிட்டனர்.
என்.எம்.பெரேராவின் கார் அசுரவேகத்தில் எங்களைக் கடந்தபோது எங்கள் கைகளில் இருந்த கறுப்புக்கொடியும் இருட்டில் அவருக்கு தெரிந்திருக்குமோ தெரியவில்லை.
சில நாட்களில் அப்போது தபால் அமைச்சராக இருந்த குமாரசூரியர் வேலணைக்கு வருகைதரவிருந்தார்.
அதில் கலந்துகொள்ளுமாறு பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்களிடமிருந்து கடிதம் வந்திருந்தது, இந்த கறுப்புக்கொடி போராட்ட வீரரருக்கு.
நேற்று முன்தினம் டான் ரீ. வியில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பேட்டி ஒன்று ஒளிபரப்பாகியது.
அதில் பேட்டியாளர் கேட்ட கேள்விக்கு, அதாவது மனித சங்கிலி போராட்டம் தொடர்பாக பதிலளித்த சித்தார்த்தன், ‘மக்கள் அதுபோன்ற போராட்டங்களில் ஆர்வம் காட்டவில்லை என்பதற்காக நாங்கள் போராட்டங்களை நடத்தாமல் இருக்க முடியாது.
நாங்கள் அதுபோன்ற பிரச்னைகளுக்கு எதிராக போராடிக் கொண்டுதான் இருக்கவேண்டும்’ என்றார்.
அதனைப் பார்த்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசினார்.
‘மக்கள் அவர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்து அனுப்பியிருப்பது அவர்கள் தங்கள் பிரச்னைகளுக்காக பாராளுமன்றில் பேசி, போராடி தமது பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்பதற்காகத்தானே.
ஆனால்,இவர்கள் மீண்டும் மக்களை அல்லவா போராட அழைக்கிறார்கள்’ என்று.
நீங்கள் போராடத்தான் வேண்டும், அதற்காகத்தானே மக்கள் உங்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் போராடுவதன் மூலம் மக்களுக்கு அதனால் ஏதாவது கிடைக்கவும் அல்லவா வேண்டும் என்று சித்தார்த்தனிடம் கேட்காமல் இருக்கமுடியவில்லை.
நீங்கள் போராடத்ததான் வேண்டும், உண்மைதான் அது போராட்டமாக, இந்த நாட்டை உலுக்க அல்லவா வேண்டும்.
எங்கே, போராடவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் நல்லூர் வாசலில் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கலாமே.
ஈஸ்டர் தாக்குதல் முடிவடைந்த சில நாட்களில் ரத்தின தேரர் கண்டியில் நடத்திய போராட்டம் எப்படி முழு நாட்டையும் பரபரப்பாக்கியதோ அதுபோன்ற ஒரு போராட்டத்தை நடத்தி நமது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ அந்த நீதிபதி தமிழர் என்பதால் அடைந்த துன்பங்களை உலகறிய
வாவது செய்யலாம்.!

-ஊர்க்குருவி.