இந்தியாவின் டில்லியில் கடந்த திங்கட்கிழமை இம்மாதத்தின் மிகக் குளிரான நாளாகப் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5.3° செல்சியஸாகக் குறைந்துள்ளது. இது பருவத்தின் சராசரியை விட இரண்டு புள்ளிகள் குறைவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, டில்லி நகரம் முழுவதும் இன்று கடும் குளிர் மற்றும் தெளிவான வானத்துடன் மிதமான பனிமூட்டம் காணப்படும், நகரின் சில பகுதிகளில் “மிகக் குளிர் நாள்” நிலைமைகளுக்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டம் காரணமாக டில்லியில் இருந்து புறப்படும் 18 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.
வெப்பநிலை சரிவுக்கு மத்தியில், நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம், இருப்பிடமற்றோர்களை இரவில் தங்க வைப்பதற்காக நகரம் முழுவதும் 190 சிறப்பு கூடாரங்கள் அமைத்துள்ளது. இந்த கூடாரங்களில் சுமார் 8 ஆயிரம் பேர் இரவில் தங்கியுள்ளனர். மேலும் அவர்களுக்கான மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.