2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால், கோவிட்-19 எனும் சுவாச தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.
இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது.
2020ல் உலகின் அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக பரவிய இந்த பெருந்தொற்று, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.
உயிரிழந்தவர்களின் உடல்களை கூட உறவினர்கள் தூரத்தில் நின்று மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு, அந்த உடல்களை மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்தனர்.
பெருந்தொற்று பரவலை தடுக்க பல உலக நாடுகள் மாதக்கணக்காக ஊரடங்கை பிறப்பித்தன. இதனால், பெருமளவு தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டது.
லட்சக்கணக்கான உயிர்சேதத்தினாலும், கோடிக்கணக்கான பொருளாதார இழப்பினாலும் உலகையே அச்சுறுத்திய கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி கொள்ள அறிவுறுத்தின.
இதன் பயனாக தொற்றினால் தாக்கப்படுபவர்கள் குறைய தொடங்கினர்.
2023 மே மாதம் உலக சுகாதார அமைப்பு, கோவிட் பெருந்தொற்றுக்கான சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே இந்தியா உட்பட உலக நாடுகளில், ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரசின் புதிய திரிபு பரவ தொடங்கி உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜெனிவாவில் இந்த புதிய திரிபு குறித்து கருத்து எச்சரித்துள்ளார்.
2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்க கூடியது அல்ல.
மேலும் சில இடங்களில் இது பரவி தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்.
மக்கள் தடூப்பூசி இன்னமும் செலுத்தி கொள்ளா விட்டால் விரைவாக செலுத்தி கொள்வது நல்லது. அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்ககள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம். இவ்வாறு டெட்ரோஸ் கூறினார்.