வெளிநாட்டவர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மூவர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயிலில் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டியில் இரண்டு வெளிநாட்டினர் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததால் தீவிரநிலை ஏற்பட்டிருந்தது.
இச்சம்பவத்தின் அடிப்படையில் இரண்டு ரயில் நிலைய அதிபர்கள், ரயில் கட்டுப்பாட்டாளர் மற்றும் ரயில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர் ஒருவரின் சேவையை இடைநிறுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை கோரப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்கு உட்பட்டு இரண்டு ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நாவலப்பிட்டி ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரியின் பணி இடைநிறுத்தம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.