அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியலை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரை இப்பயணத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.
‘ஒன்றாக வெல்வோம் – நாம் கம்பஹா’ என்ற தொனிப்பொருளில் நேற்று கடவத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
‘இந்நாட்டின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக கட்டமைக்க இடமளியேன். நாட்டின் தேவைக்கேற்ப அரசியல்வாதிகள் இசைந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
சிங்களவர்கள் என்று கூறிக்கொண்டு யாசகம் செய்வதில் பயனில்லை. பெருமிதம் உள்ள மனிதர்கள் என்றால் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கான மாற்றத்தை செய்வோம்.
போலி வாக்குறுதிகளை வழங்குவதில் பயனில்லை. அதனால் சஜித், அனுரவை எம்மோடு இணைந்து முன்னோக்கிச் செல்ல வருமாறு அழைக்கிறேன். கம்பஹா இலங்கையின் இதயமாகும். டீ.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன போன்றவர்கள் இங்குதான் உருவாகினர்.
ஐக்கிய தேசிய கட்சியினரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள். பண்டாரநாயக்கவும், டீ.எஸ். சேனநாயக்கவும் சுதந்திரத்துக்காக ஒற்றுமையாக செயற்பட்டனர்.
1971 ஆம் ஆண்டு கலவரத்தின் காலத்தில் சிறிமாவோ பண்டாராநாயக்கவுக்கு ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு உதவி வழங்கினார்.
அதன் பின்னர் பிரேமதாசவின் காலத்திலும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் எமக்கு உதவி வழங்க முன்வந்தார். நாடாளுமன்றத்தில் மோதினாலும் நாட்டைப் பாதுகாக்க அர்ப்பணித்திருக்கிறோம். சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்கிறோம்.
ஆசியாவில் எந்த நாட்டுக்கும் அந்த பெருமை இல்லை. நாம் இதே பாதையில் முன்னோக்கி செல்ல வேண்டும். மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல முடியாது. நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கிகொள்வோம். அழைப்புக்கு உரிய பதில் வழங்க வேண்டும். அதனை நேரம் வரும் போது கூறுவேன் என்று கூறினார்.