அம்பாறை மாவட்டத்தில் தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின

0
48

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அக்கரைப்பற்று சந்தைப்பகுதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த பலத்த மழை இன்று காலையும் பெய்த நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளநீர் வழிந்தோடும் பிரதான கழிமுகப் பிரதேசமான சின்னமுகத்துவாரத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றி வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் இன்று காலை முன்னெடுத்தார்.

ஜே.சி.பி வாகனங்களின் உதவியுடன் கழிமுகப்பிரதேசம், நீர் வழிந்தோடும் வகையில் அகழ்ந்து விடப்பட்டது.