உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு, வடகொரியா எப்போதும் ஆதரவு வழங்கும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்தார்.
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா 2022ஆம் ஆண்டு போர் தொடுத்தது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன.
அதேபோன்று ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாகவுள்ளது. இதன்படி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரை ரஷ்யாவுக்கு வடகொரியா அனுப்பியது.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடுமையான போர் நிலவுவதால், மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ரஷ்ய இராணுவ அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசினர்.
அப்போது கிம் ஜாங் உன் கூறியதாவது, “நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்தப் போராகும்.
எனவே, உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு தனது ஆதரவை வழங்கும்”- என்றார்.