தென்கொரியாவில் அவசர நிலை! சில மணி நேரங்களில் வாபஸ்!!

0
17


தென்கொரியாவில் திடீரென அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு சில மணி நேரங்களில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் அது இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி வாயிலாக பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய ஜனாதிபதி யூன் சாக் யோல், வடகொரிய ஆதரவாளர்களை எமது நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசர நிலை சட்டம் அமுல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசர நிலை சட்டத்துக்கு எதிராக அந்த நாட்டு பாராளுமன்றத்தில் 190 எம்.பிக்கள் வாக்களித்தனர். தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தென் கொரிய ஜனாதிபதி யூன் சாக் யோலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டதால் இராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதியின் அவசர நிலை அறிவிப்பு செல்லாது என்று பாராளுமன்ற சபாநாயகர் வூன் வொன் சிக் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்கள் பலரும் ஆரவாரம் செய்து கொண்டாடினர். இந்த அவசரநிலை பிரகடன விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து ஜனாதிபதி யூன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

தென் கொரியாவை 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்துவந்த பார்க் சங் ஹீ 1979இல் கொல்லப்பட்டபோது அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.