இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபாவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
முறைப்பாட்டாளர் தன்னை கைவிட்டுச் சென்ற மனைவிக்கு எதிராக நீதிமன்றில் இழப்பீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக முறைப்பாட்டாளரின் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும்,இழப்பீட்டு தொகையை விரைவில் பெற்று கொடுக்கவும் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட், முறைப்பாட்டாளரிடம் 20,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
இலஞ்சத் தொகையை வழங்காவிட்டால் முறைப்பாட்டாளருக்கு எதிராக ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையை தொடர்புபடுத்தி வழக்கு தாக்கல் செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவ்வாறு செய்யாமல் இருக்க குறித்த இலஞ்சத் தொகையை வழங்குமாறும் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் முறைப்பாட்டாளருக்கு கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பொலிஸ் அதிகாரி, இலஞ்சத் தொகையை வாங்குவதற்காக முறைப்பாட்டாளரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.