ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றமையைத் தொடர்ந்து பல அதிரடி மாற்றங்களுக்கு உத்தரவிட்டிருக்கின்றார். இதில் பிரதானமானது அமெரிக்க உதவித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பது. அமெரிக்க உதவித் திட்டத்தின் மூலம் பல கொழும்பு மைய அரசுசாரா நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தது ஆச்சரியமானது அல்ல – மாறாக, எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவை ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்திருக்கின்றார்.
குடியரசுக் கட்சி ஆட்சியிலிருக்கும்போது அமெரிக்க நிர்வாகம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைக்காது. இது அவர்களின் கொள்கை நிலைப்பாடு. ஐ. நா. மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து குடியரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாடு அதுதான். இதனை எவரும் மாற்ற முடியாது.
ஜனாதிபதி ட்ரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த நிக்கிஹெலே மனித உரிமைகள் பேரவையை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்தப் பேரவை ஆகக் குறைந்தது, அதன் பெயருக்குக்கூட உண்மையான தாக இருக்கவில்லை – முற்றிலும் சார்பு நிலைப்பாட்டியிலேயே இயங்கிவருகின்றது. மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றுவதும் பின்னர் அதிலிருந்து வெளியேறுவதுமாக அமெரிக்க நிர்வாக ஆட்டம் அப்படியே தொடரும்.
இங்கு கேள்வி – இந்த ஆட்டத்தை நம்பி அரசியலில் சீவிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யப் போகின்றனர்? அமெரிக்கா தொடர்பில், இந்தியா தொடர்பில், இடையில் சீனா தொடர்பில் கருத்துக்கூறும் தமிழ் அரசியல்வாதிகளும் சில ஆருடம் கூறும் கருத்துருவாக்கிகளும் இருக்கின்றனர். இவர்களின் ஆருடங்களுக்கு என்ன நடந்தது? யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, சர்வதேசத்திடம் நீதியை கோரப் போவதாகக்கூறிய தமிழ் அரசியல் தரப்புகள் சாதாரண தமிழ் மக்களுக்கு விளங்காத சொற்களை உச்சரிப்பதன் மூலம் தங்களுக்குள் யார் உத்தமர்கள் என்று சண்டையிட்டுக் கொண்டன.
இனப்படுகொலை இடம்பெற்றதா அல்லது இல்லையா என்று கூறி ஒரு தரப்பை இன்னொரு தரப்பு குற்றஞ்சாட்டிக் கொண்டது. தமிழர் விவகாரத்தை ஐ. நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து ஐ. நா பொதுச் சபைக்கு கொண்டு செல்லப் போவதாகவும் ஒரு தரப்புக் கூறியது. தங்களுக்கு அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் இதனை சாத்திப்படுத்தலாம் என்றும் ஒரு கட்சி கூறியது. மறுபுறம், புலம்பெயர் தமிழ்க் குழுக்களோ இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப் போவதாகக் கூறினர்.
இவ்வாறான கதைகளுக்கு என்ன நடந்தது? இன்று நிலைமைகளை திரும்பிப் பார்த்தால் தமிழர் தரப்புகளின் சர்வதேச சமூகத்தை நோக்கிய கோரிக்கைகள் அனைத்துமே, கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு கீழிறங்கியுள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் என்ன? தங்களின் அரசியல் பலம் என்ன? தாங்கள் எந்த நிலையிலிருக்கின்றோம்? தற்போதைய நிலையில் சாத்தியப்படக் கூடியது என்ன? இந்த விடயங்கள் பற்றி சிந்திக்காமல், தங்களை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டதன் விளைவாகத்தான் இன்று இருந்த நிலையை விடவும் நிலைமை மேலும் மோசமாகியிருக்கின்றது.
இன்றைய நிலையில் ஈழத் தமிழர்கள் தொடர்பில் பரிவுடன் நோக்குவதற்கு எவருமே இல்லை என்பதுதான் உண்மை. நாடுகளின் நலன்களுக்கான அரசியல் ஆட்டத்தில் நின்றுநிலைக்கும் பலமற்ற சிறிய இனக் கூட்டங்கள் காணாமல் போய்விடுகின்றன – என்னும் வரலாற்று உண்மைக்கு ஈழத் தமிழரும் உதாரணமாகிக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும்தான் உண்மை. இதற்கான முழுப் பொறுப்பும் ஈழத் தமிழர் அரசியலை தவறாக வழிநடத்திய – இப்போதும் தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் தரப்புகளையே சாரும்.