இருவேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது

0
4

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இடம்பெற்ற இருவேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பூவரசன்குளம் பகுதியில் கடந்த மாதம் வீடு ஒன்றில் இருந்து கைதொலைபேசி ஒன்றும் பிறிதொரு வீட்டில் இருந்து மோட்டர் சைக்கிள் ஒன்றும் திருடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அதற்கு மேலதிகமாக வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையிலான பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் முருங்கன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.