சித்திரைப் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு அமைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் பூசும் பாரம்பரிய நிகழ்வு இன்றைய தினத்தில் (16) இடம்பெற்றது.
அந்த வகையில் புதுவருடத்தில் சிறந்த ஆரோக்கியமும் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனும் ஐதீகத்தின்படி இடம்பெறும் இந்நிகழ்வு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலும் சுப நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருங்களுக்கு தலையில் புத்தாண்டு எண்ணெய் பூசும் சடங்கு இன்று புதன்கிழமை (16) காலை நடத்தப்பட்டது.
இதன்போது, தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள 153 வயதான ஆமைக்கு முதலில் தலையில் எண்ணெய் பூசப்பட்டது.
இலங்கையில் உள்ள அதிக வயதான ஆமை இதுவாகும்.
இந்த ஆமையின் மொத்த எடை 400 கிலோவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆமை 1930 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்‘கடோல்’ எனும் யானையின் தலையிலும் கபில நிற கரடியின் தலையிலும் எண்ணெய் பூசப்பட்டது.
இந்நிகழ்வானது, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய, பிரதி பணிப்பாளர் தினுஷிகா மானவடு உட்பட மிருகக்காட்சிசாலையின் முகாமைத்துவ அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.