பாதுகாப்பை பலப்படுத்திய அமெரிக்கா

0
5

ஈரான் -இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. இதன்படி ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க இராணுவம் அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டுத் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தனது இறையாண்மையைப் பாதுகாக்க அனைத்து வழிகளையும் கையாளும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை எனவும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

இந்த மிகவும் ஆபத்தான, சட்டவிரோதமான மற்றும் குற்றவியல் நடத்தை குறித்து ஐக்கிய நாடுகளின் ஒவ்வொரு உறுப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினராக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சாசனத்தைக் கடுமையாக மீறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதேவேளை, தாக்குதல்களை நடத்துவதற்கான தைரியமான முடிவு காரணமாக டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றுப் புத்தகங்களில் தனது பெயரைப் பொன் எழுத்துக்களால் பொறித்துள்ளார் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ‘வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைக்கு’ தலைமை தாங்கினார் எனவும் அவர் கூறுகிறார். இந்தநிலையில் ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நியூயோர்க் நகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் உள்ள முக்கிய இடங்கள், மத வழிபாட்டுத் தளங்கள், கலாசார மற்றும் தூதரக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வொஷிங்டன், கொலம்பியா, லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.