அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சி வெளிப்படுவதை காண முடிகின்றது. குறிப்பாக அமெரிக்காவின் துனை ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் கமலா ஹரிஸ் தொடர்பில் ஒரு வித கொண்டாட்ட மனோபவத்தையும் காண முடிகின்றது. தமிழ் மக்கள் மத்தியிலிருக்கும் மிகவும் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் கூட, பைடன் – கமலா கூட்டு தொடர்பில் நம்பிக்கை வெளியிடுமளவிற்கு அமெரிக்கா தொடர்பான கற்பனைகள் அதிகரித்திருக்கின்றன. சர்வதேச விவகாரங்களை கணித்து விடயங்களை கூறக் கூடியவர்கள் எவரும் சம்பந்தனுக்கு அருகில் இல்லாமையால் அவர் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கலாம். அமெரிக்க தேர்தல் முடிவுகள் தெளிவாக இருந்தாலும் கூட, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ரம், பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றார். இதன் காரணமாக, அங்கு சில நெருக்கடிகள் ஏற்படக் கூடும், எனினும் இதில் எதிர்பார்ப்பது போன்று பெரியளவில் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
தமிழ்ச் சூழலில் விவாதிக்கப்படுவது போன்று விடயங்கள் இலகுவானவை அல்ல. மேலும் அவ்வாறு விடயங்களை இலகுவாக பார்க்க முற்படுவது மக்களை ஒரு விதமான கற்பனைக்குள் வைத்திருக்கவே பயன்படும். பொதுவாகவே தமிழ் சூழலில் விடயங்கள் உணர்வுரீதியாக புரிந்துகொள்ளப்படுவதே அதிகம். ஆனால் விடயங்களை அறிவுபூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் நோக்குவதுதான் பயனுடையது. அதுதான் இப்போது தேவையானதும்.
ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டு என்பது அடிப்படையில் தேர்தல் வியூகம் சார்ந்த ஒன்று. கமலா ஹரிசை துனை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பதில் பைடனே மிகவும் உறுதியாக இருந்தார் ஆனால் ஜனநாயக கட்சியின் பெரும்பண்மையினர் அதனை விரும்பவில்லை. அவர்களில் அனேகரது தெரிவு 71 வயதான செனட்டர் எலிசபெத் வாரனாகவே இருந்தது. கமலா இதற்கு பொருத்தமானவர் அல்ல என்பதே அவர்களின் வாதமாக இருந்தது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளருக்கான தெரிவில் கட்சியின் பெரும்பாண்மை ஆதரவை பெற்றிருந்த பைடன் கமலா ஹரிசை நியமிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்த காரணத்தினால், விரும்பமில்லாவிட்டாலும் கூட, பைடனின் முடிவுடன் முரண்பட ஜனநாயக கட்சியினர் விரும்பவில்லை. ஏனெனில் அனைவருமே ரம்பை தோற்கடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர். எனவே தங்களுக்குள் முரண்பட்டு பிரதான இலக்கில் தோல்வியடைய அவர்கள் விரும்பவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கமலா துனை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
டொனால்ட் ரம்மின் செயற்பாடுகள் ஆசிய ஆபிரிக்க வம்சாவளி அமெரிக்கர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததால், அந்த அதிருப்திகளை வாக்குகளாக திரட்டுவதற்கான ஒரு வியூகம் தொடர்பிலேயே பைடன் கவனம் செலுத்தியிருந்தார். அந்த வியூயகத்திற்கான ஆயுதம்தான் ஆசிய – ஆபிரிக்க கலப்புள்ள கமலா ஹரீஸ். முக்கியமாக அமெரிக்காவை பொறுத்தவரையில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் வாக்குகள் குறிப்பிடத்தகு தாக்கம் செலுத்தக் கூடியவை. இவைகள் அனைத்தையும் கணித்தே பைடன் கமலாவை துனை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினார். ஏனெனில் ரம் தொடர்பில் என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் வெள்ளை அமெரிக்கர்கள் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவிருந்தது. இந்த பின்னணியில் ரம் இலகுவில் தோற்கடிக்கக் கூடிய ஒரு வேட்பாளராக இருந்திருக்கவில்லை. ஒரு வேளை கமலாவின் முகம் இல்லாதிருந்தால், பைடனின் வெற்றி சாத்தியப்படாமலும் போயிருக்கலாம். ஏனெனில் ரம் ஏழு கோடி வாக்குகளை பெற்றிருக்கின்றார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் இருவரது வாக்குகளுமே சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கருத்துக் கூறும் அமெரிக்க அரசியல் அவதானிகள் பைடன் மிகவும் ஆழமாக பிளவுற்றிக்கும் ஒரு சமூகத்தையே வழிநடத்த வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனர், அந்தளவிற்கு தேர்தல் முடிவுகள் அமெரிக்கர்கள் மத்தியில் பெரியதொரு பிளவை காண்பிக்கின்றது. ஆனால் இவை அனைத்தும் அமெரிக்காவின் குடும்ப பிரச்சினை. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இந்த உள்ளக விடயங்கள் எவையும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை என்பது தனிநபர்கள் சார்ந்த ஒன்றல்ல.
இந்த பின்புலத்தில் தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் கரிசனை எவ்வாறிருக்கும் என்பதை பார்ப்போம். ஒபாமா நிர்வாகம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது மனித உரிமைகள் சார்ந்து மென் அழுத்தங்களை பிரயோகித்திருந்தது. அதாவது இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுமாறு அழுத்தங்களை பிரயோகித்தது. இந்த பின்னணியில்தான் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பொறுப்பு கூறல் தொடர்பான பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியது. ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அமெரிக்க அழுத்தங்களுக்கு செவிசாய்க்க மறுத்தது. இந்தக் காலத்தில்தான் மகிந்த சீனாவை நோக்கி அதிகம் சாயும் கொள்கை நிலைப்பாட்டை எடுக்க முற்பட்டார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரணில்- மைத்திரி அரசாங்கம் உடனடியாகவே ராஜபக்ச நிராகரித்த பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கி, அமெரிக்க அழுத்தங்களை முடிவுக்கு கொண்டுவந்தனர். இதன் பின்னர் விடயம் முற்றிலும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாக மாற்றப்பட்டது. ஆனால் புதிய அரசாங்கமும் வாக்குறுதியளித்தவாறு விடயங்களை முன்நோக்கி கொண்டுசெல்லவில்லை. ஆனால் தற்போது மீண்டும் ராஜபக்சக்கள் ஆட்சியிலிருக்கின்ற நிலையில்தான் பைடன் நிர்வாகம் விடயங்களை கையாளப் போகின்றது. அவர்கள் இந்த விடயத்தை எவ்வாறு கையாளக் கூடும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
ஆசியாவை நோக்கிய அமெரிக்க அணுகுமுறையின் ஒரு அங்கமாகத்தான் இலங்கை தொடர்பான விடயங்கள் நோக்கப்படுகின்றன. 2012இல் இலங்கையின் மீதான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது. இந்த விடயத்திற்கும் இந்தக் காலத்தில் ஒபாமா நிர்வாகம் முன்னெடுத்த கொள்கை நிலைப்பாட்டிற்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு. அதாவது, இந்தக் காலத்தில் ஆசியாவில் மீள் – சமநிலையாக்க மூலோபாயம் என்னும் அடிப்படையில் அமெரிக்கா அறிமுகப்படுத்திய கொள்கை நிலைப்பாடே ஆசிய மையக் கொள்கையாகும். 2011இல் ஹிலாரி கிளின்ரன் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆசியா, அமெரிக்காவின் தலைமைத்துவத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பொறுப்புக் கூறல் தொடர்பான அமெரிக்க பிரேரணையும் வெளிவருகின்றது. இதன் பின்னர் வந்த டொனால்ட் ரம் தலைமையிலான நிர்வாகம் மனித உரிமைகள் பேரவையுடன் கொள்கையளவில் இயங்காது விட்டாலும் கூட, இலங்கையின் மனித உரிமைகள் சார்ந்த விடயத்தை முற்றிலுமாக கைவிடவில்லை. இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் மீதான பயணத் தடை, மனித உரிமைகள் சார்ந்த பின்னிணியின் கீழ்தான் கொண்டுவரப்பட்டது.
டொனால்ட் ரம் நிர்வாகம் ஆசியாவை மையப்படுத்தி இந்தோ – பசுபிக் மூலோபாயத்தை அறிமுகம் செய்தது. ஆசிய – பசுபிக் என்பதிலிருந்து இந்தோ – பசுபிக் என்பதாக மாற்றப்பட்டது. இலக்கு ஒன்று ஆனால் அணுமுறை வேறு. சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்குவது என்பதுதான் இரண்டு அணுமுறைகளினதும் இலக்காகும். இவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியையே பைடன் நிர்வாகம் செய்யும். எனவே ஒரு விடயம் வெள்ளிடமலை. அதாவது, சீனா தொடர்பான அமெரிக்க அணுகுமுறைகளில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. வேண்டுமானால் சொற்களை பயன்படுத்தும் போது சற்று நெகிழ்வு காணப்படலாம். உதாரணம் பொம்பியோ கூறியது போன்று சீனாவை வேட்டை மிருகம் என்று கூறாமல் விடலாம்.
இந்த பின்புலத்தில் சிந்தித்தால் பைடன் நிர்வாகம் இலங்கை தொடர்பில் ஒபாமா நிர்வாகம் கடைப்பிடித்தது போன்று மனித உரிமைகள் சார்ந்து சில அழுத்தங்களை பிரயோகிக்கலாம். மீண்டும் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றலாம். மகிந்தவை போன்று கோட்டபாய அரசாங்கமும் முற்றிலும் நிராகரித்துச் செயற்படுமாக இருந்தால் அப்போது பைடன் நிர்வாகம் எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் சர்வதேச அரசியல் விவகாரங்களில் ஆருடங்கள் பொருத்தமானதல்ல. ஆனால் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் பைடன் நிர்வாகம் நிச்சயம் கூடுதல் கவனம் செலுத்தும். அதே போன்று சீனாவை எதிர்கொள்ளுதல் என்னும் அடிப்படையிலும் கொழும்பு நெருக்கடிகளை சந்திக்கலாம். ஆனால் இவற்றால் தமிழர்களுக்கு நன்மை வருமா என்றால் அது தமிழர் தலைமைகளின் ஆளுமையில்தான் தங்கியிருக்கின்றது.
முதலில் தமிழர் தரப்புக்கள் அனைத்தும் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்கள் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும். அமெரிக்காவின் புதிய நிர்வாகம் எதைச் செய்யும் செய்யாது என்பதற்கு அப்பால், பாதிக்கப்பட்ட தரப்பு என்னும் வகையில் தமிழரின் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். இவ்வாறு நிலைப்பாட்டை முன்வைத்தவுடன் பணி முடிவடைந்துவிடாது. இது தொடர்பில் முதலில் புதுடில்லியுடன் உரையாட வேண்டும். ஏனெனில் அமெரிக்காவில் எவர் நிர்வாகத்திலிருந்தாலும், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் புதுடில்லியின் ஆதரவின்றி நகராது. இதுதான் இந்தப் பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். இந்த விடயத்தில் சீனா தொடர்பான அமெரிக்க அணுகுமுறையும் இலங்கையின் உள் விவகாரங்கள் தொடர்பான அணுகுமுறையையும் ஒன்றாக்கி புரிந்துகொள்ள முற்பட்டால் அது தவறாகும். சீனா தொடர்பான அமெரிக்க அணுகுமுறை உலகளாவியது. அதில் இந்தியா குறுக்கிட முடியாது. ஆனால் தமிழர் பிரச்சினை என்று வரும்போது அதில் இந்தியாவின் தலையீடே முதன்iமான ஒன்றாக இருக்கும். இந்தியாவை புறம்தள்ளி அமெரிக்கா தலையிடுவதற்கான எந்தவொரு தேவையும் இல்லை.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டுதான் தமிழர் தரப்பு விடயங்களை கையாள முற்பட வேண்டும். வெளியில் எவ்வாறான தரப்புக்கள் இருந்தாலும் பாதிக்கப்பட்ட தரப்பு என்னும் வகையில் தமிழர்கள் விடயங்களை சரியாக கையாளாதுவிட்டால் பைடன் அல்ல தமிழர் நம்பும் ஆண்டவனே நேரில் வந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை.
– யதீந்திரா