சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின் தரவுகள் ஹோக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

0
148

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை இலக்கு வைக்கும் ஹேக்கர்கள், அதிகம் பாதிக்கப்படக் கூடிய ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்களை திருடியுள்ளனர். உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் போன்றோருக்காக மனிதாபிமான உதவிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வழங்கி வருகிறது.
அந்த அமைப்பு, மிகவும் நேர்த்தியாக நடந்த சைபர் தாக்குதலால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இந்த தகவல் திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெளிவற்று உள்ளது. சுமார் ஐந்து லட்சத்து 15 ஆயிரம் பேரின் தனி நபர் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
அந்த தரவுகள், உலக அளவில் இயங்கி வரும் 60க்கும் அதிகமான செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை தேசிய சங்கங்கள் மூலம் சர்வதேச அமைப்புக்கு வந்தவை.
ஜெனீவாவில் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு, வியன்னாவில் உள்ள வெளி நிறுவன சர்வரில் இந்த தரவுகளை சேமித்து வந்ததாகவும் அதையே ஹேக்கர்கள் இலக்கு வைத்ததாகவும் கூறியுள்ளது.
அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் மார்டினி, இந்த திருட்டு சம்பவம், பாதிக்கப்பட்ட மக்களை பேராபத்துக்கு தள்ளியிருக்கிறது என்று தெரிவித்தார். அவர், “இதில் தொடர்புடையவர்கள் ஒன்றை சரியாக செய்யுங்கள் – யாரிடமும் தரவுகளை பகிராதீர்கள், விற்காதீர்கள், கசியவோ அவற்றை பயன்படுத்தவோ செய்யாதீர்கள்,” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.