‘எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்’ மன்னாரில் செயற்திட்டம்!

0
514

கடற்கரை சூழலில் காணப்படும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் முகமாக ‘எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளிலான சிரமதான செயற்திட்டம் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் அனுசரணையில் சிரமதானம் இடம்பெற்றது.
காலை 7.30 மணி தொடக்கம் 9 மணி வரை மன்னார் சௌத்பார் தொடக்கம் தாழ்வுபாடு கடற்கரை பகுதி வரை சுத்தம் செய்யப்பட்டது.
சாந்திபுரம், கீரி, தாழ்வுபாடு ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.
சௌத்பார் கடற்கரை தொடக்கம் தாழ்வுபாடு வரை சுமார் 4 கிலோமீட்டர் வரையிலான கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டதுடன் அனைத்து கழிவுகளும் நகரசபையின் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்தப்பட்டன.
மன்னார் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மெசிடோ நிறுவன ஊழியர்கள், நகர சபை சுத்திகரிப்பு பணியாளர்கள் இணைந்து கடற்கரை பகுதியில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
குறித்த செயற்திட்டம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள கடற்கரை பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.