மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மன்னார், நானாட்டான், மடு, முசலி, மாந்தை மேற்கு பகுதிகளை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போரட்டத்தை முன்னெடுத்தனர்.
25 வருடங்களுக்கு மேலாக முன் பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றி வரும் நிலையில் இது வரை தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் முன்பள்ளிகளில் பல தரப்பட்ட கல்வி நடவடிக்கைகளுக்கு தங்களை பயன்படுத்துகின்றபோதும் தங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுவதாக முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி, ஆளுனர் மற்றும் சம்மந்தப்பட உயர் அதிகாரிகளுக்கு தங்கள் கோரிக்கைகளை மகஜர்களாகவும் நேரில் சந்தித்து தெரிவித்துள்ள போதும் தங்களுக்கு இது வரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், விரைவில் தமது கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக முன்பள்ளி ஆசிரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொடுப்பனவு அதிகரிக்கப்படவேண்டும், 6000 ரூபா ஊக்குவிப்பு தொகை இன்று போதுமானதா?, நிரந்தர நியமனம் வேண்டும், முன்பள்ளி கல்வி முக்கியம், முன்பள்ளி ஆசிரியர்கள் முக்கியம் இல்லையா போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறு முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டதுடன் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் கையளித்தனர்.