சீனாவை ஈழத்- தமிழர்கள் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?

0
170

இன்றைய உலகளாவிய அரசியல் விவாதங்களில் சீனாவே முதன்மையான பேசுபொருளாகும். சீனாவின் பொருளாதார வளர்சிதான் இதற்கு காரணமென்று சிந்தித்தால், அது அறிவுபூர்வமான பார்வையல்ல. ஏனெனில் மேற்குலகை பொறுத்தவரையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு பிரச்சினையல்ல. அவ்வாறாயின் எது பிரச்சினை? சீனா எவ்வாறானதொரு அரசியல் முறைமையின் ஊடாக வளர்ந்து செல்கின்றது என்பதுதான் மேற்குலகின் பிரச்சினையாகும். சீனாவை மேற்குலக பொருளாதாரத்துதோடு ஊடாடச் செய்யும் நோக்கில்தான், பில் கிளின்ரன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், உலக வர்த்தக நிலையத்தோடு ஊடாடுவதற்கான கதவை, திறந்துவிட்டது. இதன் மூலம் சீனா அதிகமாக மேற்குலகத்தோடு ஊடாடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இதன் மூலம் சீனா சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகரும் – அதன் மூலம் சீனாவின் அரசியல் ஒழுங்கு தாரளவாத ஜனநாயக்ததை நோக்கிச் செல்லும் என்றே மேற்குலகம் கணித்தது. ஆனால் அது நிகழவில்லை. எனவே இங்கு பிரச்சினை – சீனாவின் பொருளாதார வளர்ச்சியல்ல – மாறாக, சீனா எவ்வாறானதொரு அரசியல் முறைமையின் ஊடாக வளர்ந்து செல்கின்றது என்பதுதான் இங்கு பிரச்சினையாகும். இது போன்றதொரு பிரச்சினைதான் முன்னர் சோவியத்திற்கும் – அமெரிக்காவிற்கும் இடையில் நிலவியது. அவ்வாறானதொரு நிலையை நோக்கி மீளவும் உலகம் நகரத் தொடங்கியிருக்கின்றது. இதன் காரணமாகத்தான், உலக அரசியல் விவாதங்களில் சீனா முதன்மையான நிலையில் நோக்கப்படுகின்றது.

இந்த விவாதங்களின் சந்தியில்தான் இலங்கையும் சந்தித்துக் கொள்கின்றது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் – இலங்கையர்கள் மத்தியில், சீனா ஒரு விடயமல்ல. நாடுகளுக்கு இடையிலான உறவுகள் எவ்வாறு நோக்கப்படுமோ அப்படித்தான் இலங்கையர்களால், சீனாவையும் நோக்கினர்.

சீனாவிற்கும் இலங்கைக்குமான அரசியல் பொருளாதார உறவு 1957இல் ஏற்படுத்தப்பட்ட றப்பர்-அரிசி உடன்பாட்டுடன் ஆரம்பமாகின்றது. வரலாற்று ரீதியாக பார்த்தால், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வணிக தொடர்புகள் பற்றி நீண்ட கதைகளை கூறலாம். ஆனால் அவைகள் அரசியல்ரீதியில் முக்கியமான விடயமாக இருந்ததில்லை. இலங்கையின் சர்வதேச உறவுகள் என்பது, இந்திய மற்றும் மேற்குலக தொடர்புகளின் வழியாகவே நோக்கப்பட்டு வந்தது. முக்கியமாக இலங்கையின் சர்வதேச உறவுகளின் மையமாக இந்தியாவே இருந்தது. இந்த அடிப்படையில்தான் சிறிலங்காவின் வெளிவிவகார கொள்கையும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்காவின் வெளிவிவகார கொள்கை என்பது, சிறிலங்காவை மாறி, மாறி ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளின் அரசியல் நிலைப்பாடு மற்றும் அணுகுமுறைகளின் தொகுப்பாகும். இந்த அடிப்படையில்தான் டி.எஸ்.சேனநாயக்க, வழிவந்த ஐக்கிய தேசிய கட்சி முற்றிலும் மேற்கு சார்பான கொள்கையை கடைப்பிடித்தது. பண்டாரநாயக்க வழிவந்த கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, நடுநிலையான வெளிவிவகார கொள்கையை முன்வைத்தது. இந்த இரு கட்சிகளின் வழியாகவே கொழும்பின் வெளிவிவகார அணுகுமுறையை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் மேற்படி இரண்டு பிரதான கட்சிகளும் உலகளாவிய அதிகாரப் போட்டிக்குள் சிறிலங்கா சிக்குப்பட்டுவிடக் கூடாதென்னும் எச்சரிக்கையுடனேயே செயற்பட்டன. இதன் காரணமாகவே அணிசாரா கொள்கையில் உறுதியாக இருந்தன.

ஆனால், 1977இல் பதவிக்கு வந்த, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கையின் பாரம்பரிய அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டது. ஜே.ஆரின் இந்த அரசியல் அணுகுமுறையானது, அன்றைய சூழலில், உலக அரசியலை ஆக்கிரமித்திருந்த பனிப்போர்-போட்டிக்குள் இலங்கையை சிக்கவைத்தது. இதனால், இந்திராகாந்தி தலைமையிலான இந்தியா அதிருப்தியடைந்தது. ஏனெனில் இந்தியா அப்போது, சோவியத் யூனியனுடன் கைகோர்த்திருந்தது. கொள்கை அடிப்படையில் அமெரிக்காவிற்கு எதிர் நிலையில் இருந்தது. ஜே.ஆரின் அணுகுமுறைக்கு பதிலடி கொடுக்க முற்பட்ட இந்தியாவோ, இலங்கையின் உள்-விவகாரத்தில் நேரடியாக தலையீடு செய்தது. 1983இல் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு வன்முறைகளை தொடர்ந்து, பெருமளவான ஈழத்-தமிழ்மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். ஆறு கோடி தமிழ் மக்களை கொண்டிருக்கும் நாம், அயல் நாடான இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படு;ம் போது, அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்னும் நிலைப்பாட்டை இந்திராகாந்தி அம்மையார் வெளிப்படையாகவே முன்வைத்தார். இதுவே பின்னர் இந்திய -இலங்கை ஒப்பந்தமாக பரிணமித்தது.

இந்தியாவை பொறுத்தவரையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கசப்பான அனுபவங்களை கொடுத்திருந்தது. இந்திய ஆய்வாளர்களின் வார்த்தையில் கூறுவதானால், இந்தியா விரல்களை சுட்டுக்கொண்ட அனுபவத்துடன் இலங்கையிலிருந்து வெளியேறியது. இதன் பின்னர் இலங்கை விவகாரங்களில் – முக்கியமாக தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு தலையிடாக் கொள்கையையே கடைப்பிடித்துவந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போதும் இந்தியா அமைதிகாத்தது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இராணுவ-தளபாட உதவிகளை கோரியபோது, இந்தியா அதனை முற்றிலுமாக நிராகரித்திருந்தது. தமிழ் மக்களின் உணர்வுகளை சீண்டும் வகையில் தாங்கள் செயற்படக் கூடாது என்பதில் புதுடில்லி உறுதியாக இருந்தது. அதே போன்று மனித உரிமைகள் விவகாரத்தை முன்வைத்து அமெரிக்காவும் கொழும்பிற்கு இராணுவ-தளபாட உதவிகளை வழங்கவில்லை. இந்த இடம்தான் சீனாவிற்கும் – இலங்கைக்குமான புதிய அத்தியாயத்திற்கு பிள்ளையார் சுழியிட்டது. இந்த அத்தியாயத்தின் விளைவுகளை முன்வைத்தே நாம் இப்போது அதிகம் உரையாடிக் கொண்டிருக்கின்றோம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது, சீனா பெருமளவான இராணுவ உதவிகளை வழங்கியது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்னும் ராஜபக்சக்களின் இச்சைக்கு சீனா முற்றிலும் பக்கபலமாக இருந்தது. சீனாவின் துணையுடன் புலிகளை வீழ்த்தும் யுத்தத்தில் ராஜபக்சக்களின் இராணுவம் வெற்றிபெற்றது. சீனா தங்களுக்கு செய்த உதவிகளுக்கான நன்றிக்கடனாகவே மகிந்த ராஜபக்ச சீன சார்பு கொள்கையை கையிலெடுத்தார். அந்தக் கொள்கையே இன்றைய அரசியல் விவாதங்களுக்கான அஸ்திபாரமாகும். இப்போது சீனா தனது காலை அதிகம் இலங்கைக்குள் ஊன்றிவிட்டது. தமிழர் தாயத்திற்குள்ளும் வரப் பார்க்கின்றது. சீனாவை பொறுத்தவரையில் தமிழர் தாயகம் என்று ஒன்றில்லை. சீனா, அனைத்தையும் சிறிலங்காவாகவே நோக்குகின்றது. அப்படித்தான் நோக்கும்.

அண்மைக்காலமாக, சீன நிறுவனங்கள் வடக்கிற்குள் காலூன்றுவது தொடர்பான சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பில் தமிழ் தேசிய அரசியல் தரப்புக்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றனர். தற்போது இந்திய பிரதமரிடம் கோரிக்கையை முன்வைத்திருக்கும் ஆறு கட்சிகளின் கூட்டு இந்த விடயத்தில் தெளிவாக இருக்கின்றது. எனினும் இந்த விடயம் தொடர்பில், ஒரு சிலரிடம் மாறுபட்ட அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அவர்கள் மிகவும் சொற்பளவிலானவர்கள்தான். அவ்வாறானவர்களோ- சீனாவை எதிர்ப்பது புத்திசாலித்தனமல்ல என்றவாறு அரசியல் வகுப்பெடுத்தல்களில் ஈடுபட முயற்சிக்கின்றனர். இந்த இடத்தில்தான், சீனாவை ஈழத்-தமிழர்கள் எவ்வாறு நோக்க வேண்டுமென்னும் கேள்வி எழுகின்றது.

உண்மையில் சீனாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது இங்கு ஒரு விடயமல்ல. ஈழத் தமிழர் எப்படியான அரசியல் விழுமியங்களோடு தங்களை சர்வதேச சமூகத்தின் முன்னால் அடையாளப்படுத்தப் போகின்றனர் – என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும். ஈழத் தமிழர்கள் எவருடன் நின்றால் தங்களது கோரிக்கைகளை சர்வதேச அரங்குகளில் முன்வைக்க முடியும்? எவருடன் நின்றால் தங்களின் கோரிக்கையை சர்வதேச அரங்குகளில் நீர்த்துப் போகாமல் பாதுகாக்க முடியும்? எவருடன் நின்றால் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையுண்டு என்பதை பேணிப் பாதுகாக்க முடியும்? சீனாவிடம் செல்வதன் மூலம் இதில் எந்த ஒன்றையாவது ஈழத் தமிழர்களால் பேணிப்பாதுகாக்க முடியுமா? சீனா தொடர்பில் சிந்திப்பவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவைதான்.

சமீப காலமாக, இந்தியாவுடன் பேசி என்ன பயன் – ஏன் நாங்கள் சீனாவை நெருங்கக் கூடாது என்றவாறான கேள்விகளை புலம்பெயர் சூழலிலும் ஆங்காங்கே மெலிதாக எட்டிப்பார்க்கின்றது. இதில் பாரதூரமான ஆபத்துண்டு. ஏனெனில் ஆழம் அறியாமல் காலை விட்டால், இறுதியில் ஓரளவு வாய்ப்பான பங்கங்களை கூட இழக்க நேரிடலாம். ஏனெனில் சீனாவிற்கு எதிரான போக்கொன்று மேற்குலக நாடுகளில் அதிகரித்துவருகின்றது. இவ்வாறான சூழலில் இந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்ற ஈழத் தமிழர்கள், தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு, நிலைமைகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கிவிடக் கூடாது. உள்ளதையும் கெடுத்தானாம் ஆண்டி என்னும் நிலைமையை ஏற்படுத்திவிடக் கூடாது.

சீனா அடிப்படையிலேயே மனித உரிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான ஒரு நாடு. உலகின் ஜனநாயக நெறிமுறையான, தேர்தல்களில் மூலம் மக்கள் தலைவர்களை தெரிவு செய்வதை ஏற்றுக்கொள்ளாத நாடு. வாழ்நாள் ஜனாதிபதியை கொண்டிருக்கும் நாடு. தலையிடாக் கொள்கை என்னும் அடிப்படையிலான வெளிவிவகார கொள்கையை கொண்டிருக்கும் நாடு. அதாவது, நாடுகளின் உள்விவகாரத்தில் ஏனைய நாடுகள் தலையீடு செய்வதை எதிர்க்கும் நாடு. உதாரணமாக தமிழர் விவகாரத்தை எடுத்துக் கொண்டால், சீனாவை பொறுத்தவரையில், இது சிறிலங்காவின் உள்விவகாரம், அதில் மனித உரிமைகள் என்னும் அடிப்படையில் அமெரிக்காவோ, ஏனைய மேற்குலக நாடுகளோ தலையீடு செய்யக் கூடாது. இந்த அடிப்படையில்தான் சிறிலங்காவின் பெறுப்பு கூறல் தொடர்பான ஜெனிவா பிரேரணைகளின் போது, சீனா கொழும்மை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.

அவ்வாறான ஒரு நாட்டிலிருந்து ஈழத் தமிழர்கள் நீதியை, அரசியல் ஆதரவை கோர முடியுமா? இந்த அடிப்படையான கேள்வியிலிருந்துதான் ஈழத்-தமிழர்கள் சீனாவை விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களின் ஆதரவுத் தளம் எப்போதுமே இந்தியாவும் மேற்குலகமும்தான். இந்தியாவும் மேற்குலகமும் இப்போது முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு நெருக்கிச் செயற்படுகின்றன. அதே போன்று முன்னர் எப்போதுமில்லாதவாறு மேற்குலக நாடுகள் சீன விஸ்தரிப்பு வாதம் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்கின்றன. மேற்குலக தாரளவாத நாடுகளை பொறுத்தவரையில், சீன எழுச்சிதான், அவர்களுக்கு முன்னாலுள்ள முதலாவது சவாலாகும்.

நான் மேலே குறிப்பிட்ட சீனாவின் அரசியல் முறைமைதான் இதற்கான காரணமாகும். இந்த பின்புலத்தில்தான், பைடன்(அமெரிக்கா) நிர்வாகத்தின் ஆசிய கொள்கை விவகாரங்களை கையாளும் உயர் அதிகாரியான பேராசிரியர் ஹேர்ட் ஹம்பல் – இவ்வாறு கூறியிருந்தார். அதாவது, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஊடாட்ட (Engagement) காலம் முடிவுக்கு வருகின்றது. ஏனெனில் சீனாவுடன் ஊடாடுவதன் மூலம் சீனாவிற்குள் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்னுமடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அமெரிக்க முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. இந்த பின்புலத்தில்தான் அமெரிக்கா அதன் பழைய சோவியத் கால – ஓரு எல்லைக்குள் முடக்கும் மூலோபாயத்தை (Containment) கையிலெடுத்திருக்கின்றது. இந்தோ-பசுபிப் (Indo-Pacific) குவாட் (Quad), ஓக்கஸ் (AUKUS) – இவ்வாறான தந்திரேபாயங்கள் அனைத்தும், சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்கும் அமெரிக்க மூலோபாயத்தின் பல்-முக தந்திரோபாயங்களாகும். இவ்வாறானதொரு காலகட்டத்தில், ஈழத் தமிழர்கள் சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்தலாமா? அது பலனளிக்குமா? உண்மையில் ஈழத்-தமிழர் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், இது தொடர்பில் சிந்திக்கும் ஈழத்-தமிழர் புத்திஜீவிகளும், சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்கும் மூலோபாயத்துடன் அணிசேர்ந்திருக்கும் நாடுகளுடன் எவ்வாறு ஊடாடுவது என்பதைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எந்தவொரு வாய்ப்பும் தானாக வராது.

யதீந்திரா