சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அனுமதிப்பத்திமின்றி சட்டவிரோதமாக எரிபொருளை விற்பனை செய்பவர்கள், களஞ்சியப்படுத்துபவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைவாக நேற்று காலை 6.00 மணிமுதல் இன்று காலை 6.00 மணிவரையிலான 24 மணித்தியாலங்களில் 67 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது 5,691 லீற்றர் பெற்றோல், 10,115 லீற்றர் டீசல், 5,621 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்தி, வடமேல், வடமத்தி ஆகிய மாகாணங்களில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.