கேகாலை ரம்புக்கனை சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்ட விசேட பொலிஸ் குழு, இன்று காலை, கேகாலை நீதிவான் நீதிமன்றில், அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அதில், நான்கு ரி-56 துப்பாக்கிகளையும், 35 தோட்டாக்களையும், பொலிஸார் பயன்படுத்தியுள்ளதாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த 42 வயதான சமிந்த லக்ஷனின் சடலம், பிரேத பரிசோதனைகளின் பின்னர், நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவரின் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த 19 ஆம் திகதி, ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தைக் கலைக்க, பொலிஸார் முயற்சித்த போது, பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில், மோதல் நிலை ஏற்பட்டது.
இதன் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 42 வயதான சமிந்த லக்ஷன் என்பவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 14 பேர், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேர், தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
3 பேர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒருவர், சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில், நேரில் சென்று விசாரணை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் குழு, இன்று சம்பவ இடத்திற்கு சென்றது.
கேகாலை நீதவான் வாசனா நவரத்ன, நேற்று பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில், பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன உட்பட சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், இன்று முற்பகல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தனர்.