இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 400 கிராம் பால் மாவின் விலை ரூ.100-ஆலும், 1 கிலோகிராம் பால்மாவி விலை ரூ.250-ஆலும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் வியாழக்கிழமை(09) உறுதிப்படுத்தியது.
ஆபத்தான குற்றவாளி ’பத்மே’ மலேசியாவில் கைது?
நாட்டின் மிகவும் ஆபத்தான குற்றவாளியாகக் கருதப்படும் தற்போதைய பாதாள உலகத் தலைவரான கெஹல்பத்தர பத்மே, மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார்.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் ஹரக்கட்டாவின் மனைவியுடன் கைது செய்யப்பட்டதாகவும் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி மலேசியா வழியாக தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது மலேசிய பொலிஸாரால் பிடிபட்டுள்ளனர் என மலேசிய செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய விசாரித்தபோது,
கெஹல்பத்தர பத்மே மற்றும் மூன்று பேரை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால், பொலிஸார் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை என்றும் இது தொடர்பாக மலேசிய பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள அளுத்கடே நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னால் உள்ள மூளையாக செயல்பட்டவர் கெஹல்பத்தர பத்மே என்று நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு கமாண்டோ சாலிந்த தலைமை தாங்கினார்,
மேலும், சாலிந்த என்ற பாதாள உலக தலைவர் பத்மேவின் கும்பலில் சித்தாந்தவாதியாகவும் நம்பப்படுவதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
பத்மேவுடன் கைது செய்யப்பட்ட மற்ற பாதாள உலகக் குண்டர்களில் சாலிந்தவும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கம்பஹா பாதாள உலகத்திற்காக கணேமுல்ல சஞ்சீவவிற்கும் கெஹெல்பத்தர பத்மேவிற்கும் இடையே நீண்டகால பகை இருந்தது.
இந்த மோதல்களில் இரு தரப்பிலிருந்தும் 20க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்களும் அவர்களது நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
அனுரவின் பெயரை தவறாக பயன்படுத்திய டிரம்ப்!

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவிக்கும் கடிதத்தில், தற்செயலாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை ‘அருண’ குமார திசாநாயக்க என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கடித தலைப்பில் ஜூலை 9 திகதியிட்டு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், இலங்கை ஜனாதிபதியின் பெயரில் தவறான எழுத்துப்பிழை உள்ளது.
இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது, பல பயனர்கள் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
நானுஓயா விபத்தில் எட்டு பேர் படுகாயம்!
மாத்தறையில் இருந்து நுவரெலியாவுக்கு சென்ற சுற்றுலா வேன் நானு ஓயா டெஸ்போட்டில் பகுதியில் வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயாபொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து நுவரெலியா ஹட்டன் A7 பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த விபத்து ஏற்பட்டதாகவும் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் விசாரணை நடத்தி வரும் நானுஓயா,பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரம்ப் வரி விதிப்பு;அரசாங்கத்தை சாடினார் சஜித்!
அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளுக்கு குறைந்த வரிகளை விதிக்க இலங்கை தவறியதற்கு, பலவீனமான மற்றும் சுயநல பேச்சுவார்த்தைகளே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.
இலங்கைப் பொருட்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட 30% அமெரிக்க வரி குறித்து பதிலளித்த பிரேமதாச,
“இலங்கை ஏற்றுமதிகள் மீது 30% அமெரிக்க வரி விதிப்பது என்பது எமது மோசமான பேச்சுவார்த்தைக்கு நாம் கொடுக்கும் விலை. எங்கள் ஈகோ ஒவ்வொரு பங்காளியையும், ஒவ்வொரு நிபுணர் கையையும் தேடுவதைத் தடுத்தது, இப்போது கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதிகள் இடையில் சிக்கி உள்ளன.”
சிக்கலான யதார்த்த உலக பேச்சுவார்த்தைகளுக்கு “பாடப்புத்தக நிபுணர்களை” நம்பியிருப்பதன் ஆபத்துகள் குறித்த ஒரு சம்பவமாக அவர் இந்நிலைமையை விவரித்தார்.
ஏப்ரல் மாதத்தில் 44% ஆக இருந்த அதிகரித்த கட்டணங்களின் தாக்கம் குறித்து ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளிடையே அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
வரிகள் குறைக்கப்பட்ட பின்னரும் இலங்கையைப் பொறுத்த வரையில், அவை இன்னும் கணிசமாக அதிகமாகவே உள்ளன.
25 ஆண்டுகளாக தலைமறைவான பொருளாதார குற்றவாளி நாடு கடத்தல்!
இறக்குமதி-ஏற்றுமதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகள் அமெரிக்காவில் தலைமறைவாக இருந்த பொருளாதார குற்றவாளி மோனிகா கபூர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கான அனுமதியை நியூயார்க் நகர நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘‘மோனிகா ஓவர்சீஸ்’’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்களான ராஜன் கன்னா மற்றும் ராஜீவ் கன்னாவுடன் சேர்ந்து நகை வணிகத்திற்கான வங்கி போலி ஆவணங்களை தயார் செய்து வரி இல்லாமல் மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசிடமிருந்து உரிமங்களைப் பெற்றார். இதன் மூலம் அவர் ரூ.2.36 கோடி மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்தனர்.
அதன்பின்னர் இந்த உரிமங்களைஅகமதாபாத்தை சேர்ந்த டீப் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் அதிக விலைக்கு விற்றுள்ளனர். அந்த நிறுவனம் இந்த அரசின் உரிமத்தை பயன்படுத்தி வரி இல்லாத தங்கத்தை கோடிக்கணக்கில் இறக்குமதி செய்தது. இந்த மோசடியால் இந்திய கருவூலத்திற்கு 6,79,000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சிபிஐ விசாரணை நடத்தி கடந்த 2004-ம் ஆண்டு மோனிகா கபூர் மற்றும் அவரது சகோதரர்கள் ராஜன் மற்றும் ராஜீவ் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான மோனிகா கபூர் கடந்த 1999-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
இதனால், அவர் 2006-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 2010-ம் ஆண்டு அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவரை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்த சிபிஐ அதிகாரிகள் முயற்சி எடுத்து வந்தனர்.
இதனிடையே ராஜன் மற்றும் ராஜீவ் ஆகியோரை கடந்த 2017-ம் ஆண்டு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் மோனிகா கபூரை நாடு கடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணையை தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.1 மில்லியன் மதிப்புள்ள அழகுசாதனப் பொருட்களை அழிக்க உத்தரவு!
எந்தவொரு செல்லுபடியாகும் ஆவணங்களும் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 மில்லியன் மதிப்புள்ள வாசனை திரவியங்கள் மற்றும் பொடி லோஷன்களை பறிமுதல் செய்து அழிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெல்லம்பிட்டியவில் உள்ள ஒரு வீட்டில் பொருட்களை சேமித்து வைத்திருந்த தொழிலதிபர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தால் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஜூன் 28, 2025 அன்று நுகர்வோர் விவகார சபையின் (CAA) அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, 35 வெவ்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த 4,079 வாசனை திரவியங்கள் மற்றும் தோல் கிரீம்கள் அடங்கிய இந்த கையிருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.
தேவையான இறக்குமதியாளர் விவரங்கள் அல்லது விநியோகத்தர் ரசீதுகள் இல்லாமல் சந்தைக்கு வெளியிடப்படவுள்ள அழகுசாதனப் பொருட்களை சட்டவிரோதமாக சேமித்து வைப்பது தொடர்பான ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.
சோதனையின் போது, தொழிலதிபர் பொருட்களை சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்ததையோ அல்லது கையகப்படுத்தியதையோ உறுதிப்படுத்தும் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து ஜூலை 8 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, இது இந்த வாரம் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வழிவகுத்தது.
சந்தையில் தீங்கு விளைவிக்கும், ஆவணப்படுத்தப்படாத பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு எதிராக தொடர்ந்து உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக CAA தெரிவித்துள்ளது. செல்லுபடியாகும் இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளர் தகவல்கள் இல்லாத விநியோகத்தர்களிடமிருந்து பொருட்களை வாங்கவோ விற்கவோ வேண்டாம் என்று சில்லறை விற்பனையாளர்களை சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சரிபார்க்கப்படாத பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கோவிலில் பணி, தேவாலயத்தில் பிரார்த்தனை ; அதிகாரி இடைநீக்கம்!
திருமலை திருப்பதி கோவிலில் பணிபுரியும் உதவி நிர்வாக அதிகாரி ஒருவர் தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டதால் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உதவி நிர்வாக அதிகாரியான ராஜசேகர் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாகவும், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்திற்குச் சென்று ராஜசேகர் பாபு பிரார்த்தனை செய்யும் வீடியோ தேவஸ்தானத்தின் கவனத்திற்கு வந்ததாக கோவில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்து மதம் அல்லாத மத நடவடிக்கைகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது திருப்பதி கோவில் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக, இதே போன்ற காரணங்களுக்காக ஆசிரியர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் உட்பட குறைந்தது 18 ஊழியர்களை இடமாற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் பதுங்குகுழியைத் தோண்டும் பணி ஆரம்பம்!
தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை நேற்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
8 ஆம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றில், போரின் முன்னர், விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தினர் என்று
கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை, புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது.
இந்தக் காலட்டத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர், குறித்த காணியில், கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலக்கீழ் பதுங்குகுழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.