IPL: ஐந்தாவது முறையாக சம்பியனானது மும்பை

0
320

டில்லி அணியை 5 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டு ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். வெற்றிக் கிண்ணத்தை தன் வசமாக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் பிறீமியர் லீக் கடந்த செப்ரெம்பர் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது. இதன் இறுதியாட்டம் நேற்றிரவு டுபாயில் நடந்தது.

இதில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டில்லி கப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற டில்லியின் அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.

இதன்படி, முதலில் களமிறங்கியது டில்லி அணி. ஸ்ரொய்னிஸ், தவான் இணை வழக்கம்போல் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

மும்பையின் சார்பில் போல்ட் முதலாவது ஓவரை வீசினார். முதல் பந்திலேயே அவர் டில்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்தப் பந்தை எதிர்கொண்ட ஸ்ரொய்னிஸ் விக்கெட் காப்பாளர் டி கொக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்தார் ரஹானே, முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டதால் இருவரும் விக்கெட்டைப் பாதுகாத்து ஆடுவதிலேயே குறியாயிருந்தனர். ஆனாலும், மூன்றாவது ஓவரில் மீண்டும் பந்துவீச வந்த போல்ட், 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரஹானேயின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

நான்காவது ஓவரை வீசிய யாதவ் தவானை 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்யவே 22 ஓட்டங்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுக்களை இழக்கப்பட்டன. இறுதியாட்டத்துக்கு தகுதி பெறுவதற்கான இரண்டாவது ஆட்டம் தவிர 10 ஆட்டங்களில் தோல்வியடைந்தமைக்கு டில்லியின் ஆரம்பம் சரியாக அமையாததே காரணமகாக இருந்தது.

எனினும், நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பந்தும் சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தனர். மும்பையின் பந்து வீச்சாளர்கள் இந்த இணையை பிரிக்க முடியாமல் திணறினர்.

இந்த நிலையில் இருவரும் அரைச்சதம் கடந்து அசத்தினர். இந்நிலையில், ரிஷப் பந்த் 38 பந்துகளில் 4 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹெட்மையர் 5, பட்டேல் 9, ரபாடா ஓட்டம் எதையும் எடுக்காமலே ரன் அவுட் ஆக 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்றது டில்லி கப்பிட்டல்ஸ் அணி.

ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 6 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 65 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

மும்பையின் பந்து வீச்சில் போல்ட் 3, கோல்டர் நைல் 2 விக்கெட்களை வீழ்த்தினர். யாதவ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

157 என்ற இலகுவான இலக்கைத் துரத்தியது மும்பையின் இந்தியன்ஸ் அணி. ரோஹித் சர்மா, குயின்ரன் டி கொக் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.

ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. ஆனாலும் 12 பந்துகளை சந்தித்த குயின்ரன் டி கொக் 20 ஓட்டங்களைப் பெற்று ஸ்ரொய்னிஸின் பந்தில் விக்கெட் காப்பாளர் பந்திடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் சூரியகுமார் யாதவ். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ரோஹித் சர்மா 51 பந்துகளில் 5 பௌண்ட்ரிகள், 4 சிக்ஸர்கள் 68 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த இஷான் கிஷன் அதிரடி காட்ட, மறுமுனையில் பொலார்ட் 9, ஹார்திக் பாண்ட்யா 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆனாலும், 18.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு வெற்றி இலக்கான 157 ஓட்டங்களை எடுத்து வெற்றியை சுவைத்தது மும்பை இந்தியன்ஸ்.

இஷான் கிஷன் 19 பந்துகளில் 3 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 33 ஓட்டங்களையும், குர்னல் பாண்ட்யா ஒரு ஓட்டத்தையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

டில்லியின் பந்துவீச்சில் நோர்ட்ஜே 2 விக்கெட்களையும், ஸ்ரொய்னிஸ், ரபாடா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தெரிவானார்.