தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கு தடை ஏற்படுத்தினால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் தடையினை ஏற்படுத்தினால், அதேபோன்று எதிர்க்கட்சிகளுக்கும் எதிர் தாக்கங்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் விருப்பத்திற்கிணங்க அதிகாரம் அமைய வேண்டும் எனவும், அதில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் ரில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இந்த உள்ளூராட்சி தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது தேசிய மக்கள் சக்தியே எனவும் நாம் 267 சபைகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதில் 120 இடங்களில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் சபைகள் அமைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 32 சபைகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் பிரச்சினை இல்லாமல் சபைகள் அமைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமகாலத்தில் சில கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு, தற்போது இணைந்து சபைகள் அமைக்க முயற்சி செய்வது ஒழுக்க விதிகளுக்கு முரணானது. எதிர்க்கட்சிகள் சபை அமைப்பைத் தடுப்பதை நிறுத்த வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி 14 சபைகள் பெற்றிருந்தாலும், அவற்றில் 13 இடங்களில் தனியாக சபைகள் அமைக்க முடியாத நிலைமை உள்ளது.ஏனைய கட்சிகள் ஒன்றிணைய முடியாமல் உள்ளதால், பல இடங்களில் அதிகாரம் அமைப்பது அரசாங்கத்திற்கே சாதகமாக உள்ளது. கொழும்பு மாநகர சபையில் 11 ஆசனங்கள் போதவில்லை.
எனினும், சுயேட்சைக் குழுக்களுடனும் பிற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.