கண்டி – நுவரெலியா வீதியில் கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கண்டி – நுவரெலியா வீதியில் கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்திருந்த நிலையில் சுமார் 40 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் நுவரெலியா, கண்டி, பேராதனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இளைஞன் ஒருவன் இன்று புதன்கிழமை (14) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக தற்போது உயர்வடைந்துள்ளது.