அமெரிக்காவிடம் சுயநிர்யண உரிமையை கோரலாமா?

0
105

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரை சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார்.
இதன்போது, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தினார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்காவுக்கு செல்லும் வசதியிருந்தால் அங்கு எதை வேண்டுமனாலும் கூறிவிட்டு வரலாம் – அதில் பிரச்னை ஒன்றுமில்லை – ஆனால், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையைப் புரிந்து கொண்டு பேசுவதனால் அங்கு எதைப் பேசுவது பொருத்தம் என்னும் புரிதலுடன்தான் பேசவேண்டும்.
குறித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் புலம்பெயர் அமைப்புகளின் நிகழ்வுகளில் வழமையாக பங்குகொள்பவர்கள்தான்.
அமெரிக்கத் தூதுவர் வடக்குக்கு இரண்டு தடவைகள் வந்து சென்றிருக்கின்றார்.
இதன்போது, வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்திருந்தார்.
இதன்போது எவரேனும் அரசியல் தீர்வு தொடர்பில் கேள்வி கேட்டால் அவரின் பதில் மிகவும் தெளிவானதாக இருக்கும் – அதாவது, நாங்கள் உள்ளூரில் கண்டடையக் கூடிய அரசியல் தீர்வை ஊக்குவிக்கின்றோம் – இராஜதந்திரிகள் என்னும் வகையில் எங்களுக்கு வரையறைகள் உண்டு.
அமெரிக்க இராஜதந்திரிகள் இதுவரையில் ஆகக்குறைந்தது அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கூட பேசியதில்லை.
இதற்கு முன்னர் அமெரிக்கத் தூதுவராக இருந்தவர் அலைனா டெப்லிஸ்.
அவர் ஒரு முறை ‘டான்’ தமிழ் ஒளி தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றையும் வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாண மக்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்காகவே யாழ்ப்பாணத்தில் மிகவும் செல்வாக்குமிக்க தொலைக்காட்சியில் தனது கருத்துகளை பதிவு செய்ய விரும்பியிருந்தார்.
அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது – அதாவது, புதிய அரசியல் யாப்பு தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன – தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? அவரின் பதில் தெளிவானது – அதாவது, இலங்கைக்கான அரசியல் யாப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்று இலங்கை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் – அதில் நாங்கள் தலையிட முடியாது.
சில விழுமியங்களை நாங்கள் வலியுறுத்துகின்றோம் – அவைகள் அமெரிக்காவில் இருப்பவை – அதாவது, நல்லாட்சி பண்புகள், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இராஜதந்திரிகள் எப்போதும் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பேசுபவர்கள்.
அவ்வாறு பேசினால்தான் அவர்கள் இராஜதந்திரிகள்.
அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் நிழலின் கீழ்தான் அவர்கள் பேசுகின்றனர்.
அதேபோன்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மிக உயர் அதிகாரியான விக்ரோறியா நூலண்ட் தமிழ்க் கட்சிகளை சந்தித்திருந்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அந்த சந்திப்பில் இருந்தார்.
அவர் என்ன கூறினார்? சுயநிர்ணய உரிமை பற்றியா பேசினார்? அரசியல் தீர்வு விடயத்தில் படிப்படியாக முன்னேறுவது தொடர்பில்தான் பேசிச் சென்றார்.
படிப்படியாக என்றால் என்ன? அமெரிக்க அரசியல் கட்டமைப்பு மிகவும் சிக்கலானது – அங்கு பிறிதொரு நாட்டில் வாழும் சிறிய மக்கள் கூட்டமொன்றுக்கு சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துமாறு பேசுவதே சிக்கலானது – ஏனெனில், சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையை
உட்கொண்டிருப்பது.
அதனை வலியுறுத்தினால் பின்னர் பிரிந்து செல்வதையும் ஆதரிக்க வேண்டும்.
இதன் காரணமாகவே இராஜதந்திரிகள் அந்தச் சொல்லை உச்சரிப்பதில்லை.
அமெரிக்கா ஒருபோதும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்காது.
எதுவானாலும் இந்தியாவின் கரிசனைகளை உள்வாங்கித்தான் விடயங்களை செவிமடுக்கும் – ஆனால், மனித உரிமைகள் விடயத்தில் தலையீடு செய்யும் – அது அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை.